வெள்ளி, 20 நவம்பர், 2009

அமினா


‘சிறுமியோ, வயதான கிழவியோ எல்லோரும் முகத்திரை அணிந்துதான் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும். உடைக் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். வியாபாரமோ, தொழிலோ செய்ய முடியாது. தனியாக வசிப்பவர்களுக்கு வேலை கிடையாது. வேலையில் இருப்பவர்கள் வரி செலுத்த வேண்டும்.

 திருமணமானவர்களுக்கு பேறுகால விடுப்பு கிடையாது. நிலம், சொத்து வாங்க முடியாது.’ இப்படித் தொடர்கிற அடக்கு முறைக்கு ஒரே காரணம் அவர்கள் பெண்கள். அதுவும் இஸ்லாமியப் பெண்கள்.

எங்கோ நைஜீரியாவில் ஒரு பொந்தில் வசிக்கும் அமினா, பெண்-களுக்கு எதிரான ஆதிக்கப்போக்கையும் கடுமையான சட்டதிட்டங்-களையும் எதிர்கொள்ளத் துணிகிறாள். முடிவற்றுத் தொடர்கிறது அவளது உணர்ச்சிபூர்வமான போராட்டம். நைஜீரியாவையும் இஸ்லாமியப் பெண்களின் வாழ்க்கையையும் கண் முன் நிறுத்தும் அபூர்வமான படைப்பு இது.

‘புத்துணர்ச்சி அளிக்கும் புத்திசாலித்தனமான படைப்பு.’
Anne - Marie Smith, Canadian Critic

‘நம்பிக்கையூட்டும் பாஸிடிவ் கதை. உத்வேகம் அளிக்கும் ஒரு புதிய உலகத்துக்கு வாசகர்களை அழைத்துச்செல்கிறது இந்நாவல்.’
Kholood Alqahatani, Journalist, Arab News (Saudi Arabia)

‘ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் ஓர் உலகில் ஒரு பெண்ணாக இருப்-பதன் பொருள் என்ன என்பதை முகமது உமர் இந்நாவலில் தெளிவாகப் படம்பிடித்துக்காட்டுகிறார். அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் இஸ்லாமிய பெண்களுக்கு இந்நாவல் நம்பிக்கையளிக்கும் தீபமாகத் திகழ்கிறது.’
நூலாசிரியர்: முகமது உமர்
வெளியீடு:கிழக்கு பதிப்பகம்
பக்கம்:368       விலை:200.00 உருவா

முதல் காம்ரேட்


சோவியத் ரஷ்யா இன்று இல்லை.லெனினுக்குப் பிறகு வந்த ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை நினைவுகூரவோ,கொண்டாடவோ இன்று யாருமில்லை. மிச்சமிருப்பது இரண்டுதான். கம்யூனிசம் என்கிற சித்தாந்தம். லெனின் என்கிற செயல்வீரரின் ஞாபகம்.


ரஷ்யா என்றால் ஜார். ஜார் என்றால் ரஷ்யா.ஆள்கள்தான் மாறுவார்கள். ஆட்சி மாறாது.அடித்தாலும் உதைத்தாலும் அவர்தான். கீழ்ப்படிவதற்கு மட்டுமே ரஷ்யர்களுக்கு உரிமை அளிக்கப்பட்டிருந்தது. இதுதான் வாழ்க்கை.இதுதான் விதி. லெனினின் வருகைக்கு முன்பு வரை.

எத்தனையோ தேசங்களில் எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.ஆனால் ரஷ்யாவில் லெனின் தலைமையில் நிகழ்த்தப்பட்ட புரட்சிக்கு இணையாக இன்னொன்றை சரித்திரம் இன்றுவரை கண்டதில்லை.

காரணம், மக்களே வீதியில் இறங்கி ஒன்று திரண்டு நிகழ்த்திக் காட்டிய புரட்சி. வழி காட்டி, வியூகம் வகுத்தவர் லெனின்.வெற்றிக்கு வித்திட்டவரும் அவர்தான்.

வீரமும் திகைப்பும் அதிரடிகளும், அடி ஆழத்தில் தேச நலன் என்கிற பொதுவான சிந்தனையோட்டமும் கொண்டது லெனினின் வாழ்க்கை. மருதனின் புலிப்பாய்ச்சல் மொழியில் லெனின் ஜிவத் துடிதுடிப்புடன் இன்னும் வாழ்கிறார்.

We do not have Soviet Russia today. And there is none to commemorate or celebrate the Russian Communist leaders who came after Lenin. Only two things remain: Communism as an ideology and the memory of the powerful and operational leader Lenin. Russia means tsar. And tsar means Russia. Only individuals come and go. The rule will not change. Whether you are beaten or kicked, tsar is the ruler. The Russians were given the right only to be submissive. Before the advent of Lenin, that was life and that was destiny. Many a nation has seen changes in the government. But history has not seen a revolution equal to the one effected under the leadership of Lenin. The reaon was that people themselves descended into the streets and made the revolution possible by their unity. Lenin guided and arrayed them and paved the way for victory. Lenin's life was comprised of courage, surprises, suddern turns but the well-being of the country was the underlying thread of his thinking. In the language of Marudan which leaps like a tiger, Lenin lives with flesh and blood again

நூலாசிரியர்:மருதன்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பக்கம்:176      விலை:80.00 உருவா

நவம்பர் புரட்சிதின வாழ்த்துக்கள்


முதல் காம்ரேட் நூலில் இருந்து சில பகுதிகள். அனைவருக்கும் நவம்பர் புரட்சி தின வாழ்த்துகள்.


0
தொழிலாளர்களிடம் நெருங்கி பழகினார் லெனின். அவர்களுடைய வாழ்க்கை முறையை, பின்புலத்தை, பொருளாதாரத் தேவைகளைக் கூர்மையாக ஆராய்ந்தார். காலம் காலமாக விளிம்பு நிலையிலேயே அவர்கள் தொங்கிக் கொண்டிருக்கும் அவலம் ஏற்படுவதற்கான காரணத்தை ஆராய்ந்தார்.

பல தொழிற்சாலைகளை நேரில் சென்று பார்வையிட்டார் லெனின். அரசாங்க அதிகாரியைப் போல் புள்ளிவிவரங்கள் சேகரித்துக் கொண்டார். எந்தத் தொழிற்சாலை? எத்தனைப் பேர் வேலை செய்கிறார்கள்? ஆண்கள் எத்தனைப் பேர்? பெண்கள் எத்தனைப் பேர்? அவர்களுடைய ஊதியம் என்ன? ஆபத்தான சூழலில் வேலை செய்யும்படி அவர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்களா? அத்தனை விபரங்களையும் குறித்து வைத்துக் கொண்டார்.

தொழிலாளர்களின் வீடுகளுக்குச் சென்றார். அவர்களுடன் சில நாள்கள் தங்கினார். குழந்தைகளை இழுத்து அருகில் வைத்துக் கொண்டு பேசினார். நீ ஏன் பள்ளிக்கு போவதில்லை? உனக்கு படிப்பதில் விருப்பம் இல்லையா? வேலைக்குப் போகும்படி உன்னை வீட்டில் நிர்பந்திக்கிறார்களா?

முன்னரே இயங்கிக் கொண்டிருந்த சில புரட்சிகர இயக்கங்களைச் சென்று சந்தித்தார்.

'தோழர்களே, இங்குள்ள தொழிலாளர்கள் நிலை மிகவும் மோசமாக இருக்கிறதே!என்ன செய்வதாக உத்தேசம்?'

'மார்க்ஸியம் சொல்லிக் கொடுக்கிறோம். கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் எல்லாவற்றையும் சொல்லித் தருகிறோம். பிரசுரங்கள் விநியோகிக்கிறோம்.'

'இதையெல்லாம் செய்தால் சங்கடங்கள் விலகிவிடுமா என்ன?'

'என்னதான் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?'

'எரிச்சல் வேண்டாம் தோழரே. மார்க்சியத்தை படிப்பது முதல் கட்டம். படித்த விஷயங்களை உள்வாங்கிக் கொண்டு செயல்படுவது அடுத்த கட்டம். நாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டியுள்ளது.'

அவர்களுக்குப் புரியவில்லை. லெனின் புரிய வைத்தார். நாங்கள் மார்க்சியத்தை கற்றுத் தேர்ந்த பண்டிதர்கள் என்று பெருமையாக காலரை தூக்கி விட்டுக் கொண்டவர்களை முன் வரிசையில் உட்கார வைத்து அடிப்படை பாடங்கள் எடுத்தார். சில விஷயங்களை ஆணித்தரமாகத் தெளிவுப்படுத்தினார். தொழிலாளர்கள் மார்க்சியத்தை உள்வாங்க வேண்டும். அமைப்பு ரீதியாக அவர்கள் திரள வேண்டும். நடந்து கொண்டிருக்கும் பேராட்டம் அவர்களுக்காகத்தான் என்பதை உணர்த்தியாக வேண்டும். அவர்களை இணைத்துக்கொண்டு செயல்படவேண்டும். புரிந்ததா?

மார்க்சியத்தை ஒரு சித்தாந்தமாக, புத்தகத்தோடு தங்கிவிடும் ஒரு தத்துவமாக மட்டுமே பார்க்க பழகியிருந்த புரட்சிகர குழுக்கள் முதல் முறையாக அந்த தத்துவத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி விவாதிக்க ஆரம்பித்தார்கள்.

மற்றொருபுறம், தொழிலாளர்களின் ஆதரவும் லெனினுக்குக் கிடைத்தது. காரணம், முதல் முறையாக, அவர்கள் வாழ்க்கையோடு தொடர்புடைய கேள்விகளை எழுப்பி அதற்கான விடைகளையும் அளித்தார் லெனின். தொழிலாளர்கள் உற்சாகமடைந்தனர். லெனின் கலந்து கொள்ளும் அத்தனைக் கூட்டங்களிலும் தவறாமல் கலந்து கொண்டனர்.

தொழிலாளர்களுக்குக் கற்றுக் கொடுப்பதோடு நிறுத்திக் கொள்ளவில்லை லெனின். அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளவும் செய்தார். தொழிலாளர்களால் நேசிக்கப்படும் ஒரு தலைவராக லெனின் வளர ஆரம்பித்தது இந்தக் காலகட்டத்தில்தான்.

0
முதல் நாள். சுதந்தர சோவியத். அக்டோபர் 26-ம் தேதி. விவசாயிகள், தொழிலாளர்கள், புரட்சி வீரர்கள், கட்சி அங்கத்தினர் ஸ்மோல்னியில் கூடியிருந்தனர். அனைவரும் மேடையை உற்று பார்த்துக் கொண்டிருந்தனர். எங்கே அவர்?

கூடியிருந்தவர்களுக்கு அந்த இடம் போதவேயில்லை. அறை பிதுங்க பிதுங்க நின்று கொண்டிருந்தார்கள். நிற்பதற்கு இடம் இல்லாதவர்கள் ஜன்னல் வழியாக முண்டியத்து மேடையை பார்த்துக் கொண்டிருந்தனர். இன்னமும் சிலர் தூண் விளிம்புகளில் ஏறி நின்று கொண்டிருந்தனர்.

உற்சாக மிகுதியால் சிலர் தலையில் அணிந்திருந்த தொப்பிகளை உயரே வீசிக் கொண்டிருந்தனர். எங்கும் உற்சாகக் கூச்சல்.

லெனின் மேடையில் தோன்றினார்.

கொண்டாட்டத்துக்கான சுவடே இல்லாமல் மிகச் சாதாரணமாக இருந்தது அவர் முகம். பார்வையால் விழுங்கி விடுவதைப் போல் மொத்த கூட்டத்தையும் ஒரு முறை பார்த்தார். பிறகு, கைகளை உயர்த்தினார்.

’இரண்டு ஆணைகளை இந்தச் சபையின் அங்கீகரத்துக்காக சமர்பிக்கிறேன்’.

அந்த அறை முழுவதும் எதிரொலித்தது அவர் குரல்.

முதல் ஆணை, சமாதனம் பற்றியது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது நம்முடைய போர் அல்ல. அதில் நாம் கலந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. நமக்குத் தேவை போர் அல்ல. சமாதானம். பொருட்சேதத்தையும் உயிர் சேதத்தையும் உடனே தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு இந்தச் சபையின் ஒப்புதலை வேண்டுகிறேன்.

இரண்டாவது, நிலம். நிலம் மீதான தனியுரிமை நீக்கப்படுகிறது. நிலப்பிரபுக்கள், அரச குடும்பங்கள், குருமார்கள் போன்றவர்களுக்குச் சொந்தமான நிலம் பறிமுதல் செய்யப்படும். சோவியத் சபையின் பராமரிப்பின் கீழ் அவை வந்து சேரும். பறிமுதல் செய்யப்பட்ட நிலத்துக்கு ஈட்டுத்தொகை தர இயலாது. ஏழைகளிடம் உள்ள நிலங்கள் அவர்களுக்கே சொந்தம்.

நன்றி.

அவ்வளவுதான். சொல்லிவிட்டு மேடையை விட்டு இறங்கிவிட்டார் லெனின்.

புதிய சோவியத் தேசம் மலர்ந்த முதல் நாளே இரண்டு அரசாணைகள். இரண்டுமே முக்கியமானவை. ரஷ்யர்களின் வாழ்கை மாற்றி அமைக்கக்கூடியவை. சந்தோஷம். மகிழ்ச்சி. ஆனால், கூடியிருந்தவர்களுக்குச் சில விஷயங்கள் புரியவில்லை. போல்ஷ்விக் கட்சி மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறது. அரசாங்கமே அடியோடு மாறிவிட்டது. புதிய சோவியத் மலர்ந்திருக்கிறது. ஒரு சிறிய கொண்டாட்டம்? உற்சாகமாக சில வார்த்தைகள்? ம்ஹும். கேளிக்கை, கும்மாளம் வேண்டாம். குறைந்தது ஒரு வெற்றி புன்னகை? சரி அதுவும் வேண்டாம். கையசைவு? பெருமிதமாக ஒரு பார்வை. நாங்கள் வென்றுவிட்டோம் என்று ஒரே ஓர் அறிக்கை? ம்ஹும். எதுவுமே இல்லை. வந்தார். அரசாணைகளை வாசித்தார். நன்றி சொன்னார். போய்விட்டார். என்ன மனிதர் இவர்?

0

செஞ்சதுக்கம் , மாஸ்கோ. எப்போது போனாலும் அந்தக் கட்டடத்தின் வாசலில் மக்கள் எறும்புகளைப் போல் வரிசையாக நின்றுகொண்டிருப்பார்கள்.

நெருங்கிப் பார்த்தால் இரண்டு தனித்தனி வரிசைகள் இருப்பது தெரியும். ஒன்று ரஷ்யர்களுக்கு. இன்னொன்று அயல் நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு. கொல்லும் பனிக்காலத்தில்கூட மக்கள் அமைதியாகவே நின்று கொண்டிருப்பார்கள். பெரும்பாலானவர்கள் தங்கள் குழந்தைகளையும் கையோடு அழைத்து வருவார்கள். அவர்கள் காது வரை கம்பளியைச் சுற்றி.

சில சமயம் இரண்டு அல்லது மூன்று மணி நேரங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். அல்லது அதற்கு மேல்.

பழுப்பு நிற சீருடை அணிந்த பாதுகாவலர்கள் ஆங்காங்கே இருப்பார்கள். மெடல் டிடெக்டரால் உங்கள் உடலை மேய்வார்கள். பாக்கெட்டில் இருப்பதை துழாவுவார்கள். உடைமைகளை உள்ளே கொண்டு போக முடியாது. நீங்கள். நீங்கள் மட்டும்தான்.

தவிரவும், இரண்டு இரண்டு பேராகத்தான் உள்ளே நுழைய முடியும்.

அந்த அறையை மார்பிள் அறை என்று அழைக்கிறார்கள். வெள்ளையும் கருப்புமாக மார்பிள் பதிக்கப்பட்டிருக்கம். இடையே சிவப்புச் சதுரங்கள்.

அறைக்குள் நுழைந்துவிட்டால் சில நிமிடங்கள் எதுவும் தோன்றாது. வெறுமை மட்டுமே முழுக்க முழுக்க நிறைந்திருப்பதாக நீங்கள் நம்புவீர்கள். அதிக வெளிச்சம் இருக்காது. ஒருவரும் ஒரு வார்த்தை கூட பேசமாட்டார்கள் என்பதால் பரிபூரன அமைதி. அமைதி மட்டுமே.

அறைக்கு நடுவே நடந்து சென்றால் லெனின் படுத்திருப்பதைக் காணலாம். கறுப்பு சூட். கழுத்தில் டை. அருகில் செல்லலாம். ஓரளவுக்கு நெருக்கமாகவே.

லெனினின் கைகளில் தெரியும் பளபளப்பை பார்க்கும்போது படுத்திருப்பது பொம்மையோ என்று நினைக்கத் தோன்றும். ஆனால் முகத்தைப் பார்த்தால் அந்தச் சந்தேகம் வராது. வழக்கத்தை விட கூடுதல் பிங்க் நிறம். உயிர்ப்புடன் இருப்பது போன்ற உணர்வு.

அந்த உணர்வு கலைவதற்குள் வெளியேறிவிட வேண்டும். அல்லது நிர்பந்திக்கப்படுவீர்கள்.

சில விநாடிகள். மிஞ்சி மிஞ்சிப் போனால் சில நிமிடங்கள். அதற்கு மேல் நிற்க முடியாது. பின்னாலிருந்து மெலிதாக அழுத்துவார்கள்.

’தோழரே!’

மீள்பதிவு கட்டுரை
நன்றி:மருதன்
புகைப்படம். வினவு

வியாழன், 5 நவம்பர், 2009

கையறு நிலைக் கதறல்: தீபச்செல்வன் கவிதைகள்

தமிழ்நதி

ஈழமண்ணை சாவெனும் சர்ப்பம் முற்று முழுதாக விழுங்கிவிடுமோ என்று ஐயுறும் சூழலில் தீபச்செல்வனின் இக்கவிதைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது. சகல அதிகாரங்களும் கைகோர்த்துநின்று, அப்பாவி சனங்கள் மீது மிகக்கோரமான, மனிதாபிமானமற்ற தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன. தனது சொந்த மக்களைச் சூழும் மரணத்தை, கூட்டம் கூட்டமான இடப்பெயர்வை, பசியை, நோயை, மனப்பிறழ்வை பார்க்கவும் கேட்கவும் விதிக்கப்பட்ட ஒரு இளைஞனின் கையறு நிலைக் கதறலே இந்தக் கவிதைகள். போருக்குள் பிறந்து, அதற்குள்ளே வாழ்ந்து, கொடுங்கொலைக் காலமொன்றிற்குச் சாட்சியாயிருக்கும் தீபச்செல்வன் அவற்றை எழுத்தில் பதிவு செய்திருக்கிறார். பயமும் பதட்டமும் கோபமும் இயலாமையும் எல்லாக் கவிதைகளிலும் பரவிக்கிடக்கின்றன.


ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசம் எப்படி வெறிச்சிட்டுக் கிடக்கும், அங்கு மனித உயிர் எவ்வளவு மலினமானதென்பதை ‘யாழ். நகரம்’ என்ற கவிதை பேசுகிறது.

‘நீங்கள் சாப்பிடும் கொத்துரொட்டி
மேசையில் பரவியிருக்க
எனது பிணம்
பின்னணியாய் தெரியும்’

மனிதர்களது மேன்மைகள் யாவும் துப்பாக்கிகளால் அழிக்கப்பட்டுவிட்டன, எல்லா உன்னதங்களும் இழிவின் காலடியில் சரிந்துவிட்டன என்பதற்கு தீபச்செல்வனின் மேற்கண்ட வரிகளைவிடச் சாட்சியம் வேண்டியதில்லை.

இத்தொகுப்பை வாசித்து முடித்ததும் வெறிச்சோடிப் போன நகரங்களும், கிராமங்களும் அவற்றின் தெருக்களுமே திரும்பத் திரும்ப நினைவில் வந்தன. சூனியம், வெறுமை இன்னபிற சொற்களுக்குள் அடக்கமுடியாத மரணப் பெருவெளியாக, சாம்பல் மேடாக, சாக்காடாக மக்கள் பலவந்தமாக விரட்டப்பட்ட நிலங்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறார். ‘மாதா வெளியேற மறுத்தாள்’, ‘கிராமங்களை விட்டு வெளியேறியவர்களின் பாடல்கள்’, ‘ஏ-9 வீதி’, ‘எரிந்த நகரத்தின் காட்சிக் குறிப்பு’, ‘பறவையால் அழிக்கப்பட்ட கிராமமும் பயங்கரம் கலந்த சிறகுகளும்’ போன்ற கவிதைகள் சூனிய நிலத்தைப் பற்றியே பேசுகின்றன. அகதிகளாய் ஓடிக்கொண்டே இருக்கும் நிராதரவான மக்களைத் தொடர்ந்து போகின்றன இவரது வார்த்தைகள்.

‘நாங்கள் கறுப்பு மனிதர்கள்
கறுப்புப் பொதிகளைச் சுமந்தபடி
நிழல் வீடுகளைப் பறிகொடுத்துவிட்டு
சிறுதுண்டு நிழலுக்காக
எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம்’

பல இடங்களில் பாலஸ்தீனிய கவிஞராகிய மஹ்மூத் தர்வீஷ்சை தீபச்செல்வனின் கவிதைகள் ஞாபகப்படுத்துகின்றன. அவர் இருப்பிழந்து எங்கெங்கோ அலைந்தபோதிலும் தன் தாய்நிலத்தையே நினைத்துக்கொண்டிருந்தார். பாலஸ்தீனத்தை அவர் காதலித்தார். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிரான அவருடைய கவிதைகள் புகழ்பெற்றவை. அவர் எழுதுகிறார்:

‘அவன் எல்லாத் துறைமுகங்களில் இருந்தும்
துரத்தப்பட்டான்
அவனது அன்புக்குரியவளையும்
அவர்கள் தூக்கிச் சென்றனர்
பின்னர் கூறினர்
நீ ஒரு அகதி என்று’

நாடற்று அலையும் எல்லோருக்குள்ளும் துக்கம் நிரம்பி வழிகிறது. அது கவிதைகளாகப் பெருக்கெடுக்கிறது. கண்முன்னால் சொந்தச் சனங்கள் செத்து விழுகின்றனர். மரண பயத்தில் கதறி ஓடுகின்றனர். தேடுதல் வேட்டையில் கைது செய்யப்படுகின்றனர். பெண்கள் வன்கலவி செய்யப்படுகிறார்கள். எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு படைப்பு மனத்தின் வெளித்தள்ளலே தீபச்செல்வனின் கவிதைகள். வேறொன்றும் செய்யவியலாது. கவிதை எழுதலாம். ஆனால், எழுதுவதுகூட பாதுகாப்பானதல்ல என்று அவருக்குத் தெரிந்தே இருக்கிறது. தனது முன்னுரையிலேயே கூறுகிறார்:

‘எதைப் பற்றியும் பேசமுடியாத மலட்டுச்சூழலில் நான் எழுதிக்கொண்டிருப்பது அம்மாவிலிருந்து நண்பர்கள் வரை தேவையற்ற செயலாகவே கூறப்படுகின்றது’ இருந்தும் அவர் எழுதுகிறார். இல்லையெனில் மூளைக்குள் வெளித்தள்ளப்படாத வலி குந்தியிருக்கும். ஒருநாள் சித்தம் கலங்கிப்போகும். இலங்கை அரசாங்கம் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதை மிகச்சரியாகப் புரிந்துவைத்திருக்கிறார் தீபச்செல்வன். மக்களை மரணத்தின் மூலம் பணியவைப்பது, கோழைகளாக்கி கும்பிட வைப்பது, ‘ஒன்றும் வேண்டாம் விட்டுவிடுங்கள்’ என்று கையேந்த வைப்பது. ‘நிறைவேற்று அதிகாரம்’ என்ற கவிதையின் வரிகள் இவ்விதம் அமைகின்றன.

‘எங்கள் பாடலைத்
திருக வேண்டும்
நாங்கள் அழுது வடியவேண்டும்
என்ற செய்திக்காகவே
அவர்களது தேசம்
காத்துக் கிடந்தது’

... .. .. .. ..
எங்கள் பாடலை
கொலைசெய்யத் தீர்மானித்தார்கள்
நிறைவேற்று உடைகளை
அணிந்தபடி‘

‘பதுங்குகுழியில் பிறந்த குழந்தை’ தொகுப்பிலுள்ள அநேகமான கவிதைகள் அரசியலைப் பேசும் கவிதைகள்தான். பொதுவான கவிதைகளையே ‘நன்றாக இருக்கின்றது’ என்று சொல்வது ஒரு சம்பிரதாயம் அன்றேல் வெறுஞ்சொல். கவிதைகளை அனுபவிக்கத்தான் முடியுமே தவிர அளவிட முடியாது. ‘நீ பேசாது போன பின்னேரம்’, ‘அம்மாவின் வீடு கட்டும் திட்டம்’ போன்ற சில கவிதைகளைத் தவிர்த்துப் பார்த்தால், மிக முக்கியமான தொகுப்பு. ‘நீ இரத்தம் சிந்திய தெருக்களில்’ வரும் நம்பிக்கை கலந்த வரிகளைப் போல அற்புதங்களுக்காகவே நாங்கள் காத்துக்கிடக்கிறோம்.

‘என்றேனும் ஒருநாள்
நமது நகரின் பிரதான தெருவில்
உனது சைக்கிள் நிறுத்தப்பட்டிருக்கும்’

தீபச்செல்வனின் கவிதைகள் ஒரு இனத்தின் வலி. காயத்திலிருந்து கொட்டும் குருதி. நெரிபடும் கழுத்திலிருந்து விக்கித்துக் கிளம்பும் ஓலம். கொலை படுகளத்தைப் பார்க்க விதிக்கப்பட்ட ஒரு இளைஞனின் கண்ணீர்த் துளிகள்.

கவித்துவம், சொற்கட்டு, செறிவு, படிமம் என்பதற்கப்பாலும் இருக்கிறது கவிதை. அது உண்மையை எழுதுவது. உண்மைக்காய் துடிப்பது. உண்மையைச் சார்ந்திருப்பது. அவ்வகையில் தீபச்செல்வனின் முதற்தொகுப்பே மிக முக்கிய தொகுப்பாக வெளி வந்திருக்கிறது. மிக இளைய வயதில் இப்படி எழுத முடிகிறதே என்று வியப்பதா அன்றேல் இப்படி எழுத நேர்ந்ததே என்று துக்கிப்பதா என்று தெரியவில்லை.

பதுங்கு குழியில் பிறந்த குழந்தை
தீபச்செல்வன்
விலை:ரூ 60

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
669,கே.பி.சாலை
நாகர்கோவில் -629001
தொலைபேசி: 04652278525


நன்றி: - தமிழ்நதி
                கீற்று இணையம்


வாழ்வே இலக்கியம்

தீம்பாவை



கேரளாவில் தீண்டாமை தலைவிரித்தாடிய நேரமது. மக்களின் பிரச்சனைகளை பேச வேண்டிய இலக்கியமும் எழுத்தும் கூட நம்பூதிரிகளிடமும் உயர்ஜாதி மக்களிடம் சிக்கித் திணறிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் தான் ஒடுக்கப்பட்ட பாவப்பட்ட மக்களின் வாழ்க்கையை தன்னுடைய எழுத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்தவர் வைக்கம் முகம்மது பஷீர். தன் எழுத்துக்காகவே அதிகம் தண்டனைக்குள்ளான கேரள எழுத்தாளரும் அவராகத் தான் இருக்க முடியும்.


பஷீரின் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது. அனுபவங்களைத் தேடி அவர் இந்தியா முழுவதும் பயணம் செய்திருக்கிறார். சுதந்திரப் போராட்ட வீரராக, அரசியல் கைதியாக, போதை அடிமையாக, மனநோயாளியாக, சந்நியாசியாக, பிச்சைக்காரனாக தனக்கு நேர்ந்த ஒவ்வொரு அனுபவத்தையும் இலக்கியமாக்கியவர் வைக்கம் முகம்மது பஷீர்.

அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளை மட்டுமே எழுதுபவராக, ஆதிக்க சக்திகளை தொடர்ந்து கேள்வி கேட்பவராக, சமுதாயத்தின் கட்டுப்பாடுகளை மீறுபவராக என ஒரு புரட்சி எழுத்தாளராகவே பஷீர் வாழ்ந்திருக்கிறார். அவரின் வாழ்க்கையின் நடைபெற்ற அத்தனை சம்பவங்களையும் தொகுத்து ஈ.எம்.அஷ்ரப் என்பவர் நூலாக வெளியிட்டுள்ளார்.

மலையாளத்தில் வெளிவந்த இந்த நூலை குறிஞ்சிவேலன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ‘காலம் முழுதும் கலை’ என்ற பெயரில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மலையாள புத்தகத்தில் இருக்கும் சுவாரஸ்யம் சிறிதும் குறையாமல் இந்தப் புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டுள்ள்ளது.

காயி அப்துல் ரஹ்மான் என்ற ஏழை வியாபாரியின் ஆறு குழந்தைகளில் மூத்தவர் தான் முகம்மது பஷீர். வறுமை, மதநம்பிக்கைகளில் ஊறிக்கிடந்த சமுதாயத்தை எதிர்த்து தன் குழந்தைகளை, குறிப்பாக பெண் குழந்தைகளை படிக்க வைத்தார் அப்துல் ரஹ்மான். சுதந்திரப் போராட்டமும், தீண்டாமை எதிர்ப்பு போராட்டமும் கேரளாவில் உச்சத்தில் இருந்த நேரமது.

கோவிலுக்குள் நுழையும் உரிமை கேட்டு தாழ்த்தப்பட்டவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் கண்களில் சுண்ணாம்பைத் தேய்ப்பது, சிறுநீர் கழிப்பது, கற்களால் அடிப்பது என போலீசாரும், மேல்சாதியினரும் துன்புறுத்தினர். இந்த தீண்டாமையை எதிர்த்து வைக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பெரியார் கலந்து கொண்டார். காந்தியும் வைக்கத்திற்கு வந்து தன்னுடைய ஆதரவை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி பஷீரை வெகுவாக பாதித்தது. பஷீரும் படிப்பை விட்டுவிட்டு காங்கிரசில் சேர முடிவு செய்தார். வீட்டை விட்டு வெளியேறி கோழிக்கோடு சென்றார். காங்கிரசில் இணைந்தார். உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டார். போலீசாரால் மிகக் கடுமையாக தாக்கப்பட்டார். மூன்று மாத கடுங்காவல் தண்டனை கிடைத்தது. சிறையில் தங்களைத் துன்புறுத்தும் அனைவரும் உயர்ஜாதி இந்துக்களாக இருப்பதைக் கண்டார்.

அவர்களை கிண்டல் செய்யும் பாணியில் சிறையில் பல குறும்புகள் செய்தார். ஒரு பக்கெட்டில் தண்ணீரை எடுத்து அதில் துளசி இலைகளைப் போட்டு வருபவர்கள் மீது ஊற்றி அவர்களை புனிதப்படுத்தினார். உயர் அதிகாரிகளைப் போல பூணூலும் போட்டுக் கொண்டார். இதனால் இன்னும் சித்திரவதைகளுக்கு ஆளானார். தன்னை அடித்துத் துன்புறுத்தும் வாரியார் என்னும் இன்ஸ்பெக்டரை கொன்று விடத் தீர்மானித்தார். விடுதலையானதும் கத்தியை எடுத்துக் கொண்டு அவரைக் கொலை செய்யச் சென்றார். வழியில் காங்கிரஸ் தலைவர் ஒருவரால் தடுக்கப்பட்டார். இவ்வளவு வேகமும், கோபமும் இந்த சிறிய வயதில் இருக்கக்கூடாது என அவர் அறிவுறுத்தினார்.

ஆனால் அந்தக் கோபம் அவர் வாழ்க்கை முழுவதும் இருப்பதை இந்தப் புத்தகத்தின் மூலம் காண முடிகிறது. இருபது வயதிலேயே சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவாக பல கட்டுரைகளை பத்திரிகைகளில் எழுதினார். அவை பயங்கரவாதத்தை தூண்டுபவையாக இருப்பதாகக் கூறி அவரைக் கைது செய்ய வாரண்ட் வந்தது. வைக்கத்தில் இருந்து தப்பி எர்ணாகுளம் சென்று அங்கிருந்து கண்ணனூர் வழியாக பெங்களூர் சென்றார். அடுத்த ஒன்பது வருடங்களும் பஷீர் தீவிர பயணம் மேற்கொண்டார்.

கையில் சிறிதும் காசில்லாமல் நடந்தும் வாகனங்களிலுமாக தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருந்தார். பலவகைப்பட்ட மக்களையும் வாழ்க்கையையும் அறிந்து கொள்வது மட்டுமே அவரது நோக்கமாக இருந்தது. பல நாட்கள் தண்ணீர் மட்டுமே அவரது உணவாக இருந்திருக்கிறது.

இடையில் சில மாதங்கள் கப்பல் தொழிலாளியாக மெக்காவுக்கும் பயணம் செய்தார். தன்னுடைய பெயரை ராமச்சந்திரன் என மாற்றிக் கொண்டு அஜ்மீர் பாலைவனத்தில் நிர்வாண சாமியாராக வசித்தார். அதன்பின் புத்தகயாவில் சில காலம் வாழ்ந்தார். முஸ்லீம் சந்நியாசிகளான சூஃபிகளுடன் சில காலம் வாழ்ந்தார். எல்லைக்காந்தி, ஷேக் அப்துல்லா ஆகியோருடனும் சில காலம் வசித்தார்.

தனக்குக் கிடைத்த அத்தனை அனுபவங்களையும் பின்னாளில் எழுத்தில் பதிவு செய்தவர் பஷீர்.

மீண்டும் ஊர் திரும்பியதும் தன்னுடைய வேலை எழுதுவது மட்டுமே என்று தீர்மானித்தார். அரசர்களும், பணக்காரர்களும் மட்டுமே கதைகளின் நாயகர்களாக இருந்த நேரத்தில் சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களையும் வஞ்சிக்கப்பட்டவர்களையும் பற்றி எழுதினார். திருவிதாங்கூர் சமஸ்தானம் பற்றியும், சர்.சி.பி.ராமசாமி ஐயர் பற்றியும் ‘அதிர்ஷ்டம் கெட்ட என் தேசம்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதினார். இந்தக் கட்டுரை வெளிவந்த தீபம் இதழ் அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

‘பட்டத்தின் பேய்க்கனவு’ என்ற பெயரில் அரசை விமர்சித்து ஒரு கட்டுரை எழுதியதற்காக கைது செய்யப்பட்டார். நண்பர்கள் உதவியுடன் சிறையில் இருந்தபடியே ‘மாத்ருபூமி’, ‘உஜ்ஜீவனம்’ பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதினார். இந்த நேரத்தில் கம்யூனிஸ்டு தலைவர்களுடன் நெருக்கமான உறவு ஏற்பட்டது. கம்யூனிஸ்டு கட்சியை ஆதரித்த அதே நேரத்தில் அதன் தனிநபர் சுதந்திரமின்மையை கடுமையாக எதிர்க்கவும் செய்துள்ளார்.

ராமசாமி ஐயருக்கு எதிரானக் கட்டுரைக்காக பஷீருக்கு ராஜதுரோகத் தண்டனையாக இரண்டரை ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இனிமேல் இப்படிப்பட்ட கட்டுரை எழுத மாட்டேன் என்று எழுதிக் கொடுத்தால் விடுதலை செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அது படைப்பாளியின் சுதந்திரத்தில் தலையிடும் வேலை என்று கூறி பஷீர் மறுத்ததோடு சிறைத் தண்டனையை முழுமையாக அனுபவித்தார்.

மிகச் சிறந்த கதைகளான மதிலுகள், கைவிலங்கு, டைகர், இடியன் பணிக்கர் போன்ற கதைகளை பஷீர் இந்தச் சிறை வாசத்தின்போது தான் எழுதியிருக்கிறார். வெளியில் வந்ததும் புத்தகக் கடைகள் நடத்தினார். இந்த நாட்களில் வாசிப்பது, எழுதுவது, பட்டினி கிடப்பது என்பதுதான் அவரது வாழ்க்கையாக இருந்தது.

பஷீரின் எழுத்துக்கு கேரளாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அவர் அருவெறுக்கத்தக்க மொழியில் எழுதுவதாகவும், அவருக்கு மலையாள இலக்கணம் தெரியவில்லை எனவும், நல்ல மொழிநடை இல்லையெனவும் விமர்சகர்கள் விமர்சித்தார்கள். சமுதாயம் வரையறுத்து வைத்துள்ள ஒழுக்கம், சாதி போன்ற பல விஷயங்களை பஷீர் கேள்விக்குள்ளாக்கினார் என்பதே அதற்கு காரணம்.

பஷீருக்கு ஆதரவாக பிரபல இலக்கிய விமர்சகர் எம்.பி.பால் தன்னுடைய கருத்தை இவ்வாறு தெரிவித்தார். “இரத்தத்தைக் கண்டால் தலைசுற்றக் கூடியவர்கள் பஷீரின் எழுத்துக்களைப் படிக்காமல் இருப்பதே நல்லது. நம்பூதிரிகள் மற்றும் உயர்ஜாதி இலக்கியவாதிகளின் உரையாடலிலும் சமுதாய அமைப்பிலும் மகிழ்ச்சி கண்டவர்களுக்கு பஷீரின் கோழி இறைச்சியும் பிரியாணியும் பிடிக்கும் என்று தோன்றவில்லை. ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். இலக்கியம் உயர்ஜாதி முதலாளிகளின் சொத்து ஒன்றும் அல்ல”.

தன்னுடைய ‘பால்யசகி’ என்ற நாவலின் முன்னுரையில் இதற்கு பஷீர் பதில் அளித்துள்ளார். “மஞ்சள் நீராட்டு விழாவை மட்டும் இலக்கியமாக்கலாம். ஆனால் சுன்னத் கல்யாணத்தை இலக்கிய குலப் பெருமைக்கு ஒத்துவராது என்று நினைப்பவர்களிடம் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை”.

ஒருசமயம் நண்பர்களோடான இலக்கியக் கூட்டத்தில் நண்பர் ஒருவர் பஷீருக்கு மலையாள இலக்கணம் தெரியவில்லை என்றும், அவர் அதைக் கற்றுக்கொண்டு எழுத ஆரம்பிக்கலாம் எனவும் உபதேசித்தார். அதற்கு பஷீரின் பதில், “போடா, உன் பொண்டாட்டிக்கு வரதட்சணையா வந்ததாடா இந்த மலையாள மொழி? எனக்கு என்ன இஷ்டமோ அதைத்தான் எழுதுவேன். எனக்குத் தெரிஞ்ச எழுத்துக்களைத் தான் எழுதுவேன். அது யாருக்கு சேரணுமோ அவங்களுக்கு போய்ச் சேரும். உன்னோட ஏட்டு இலக்கணம் எனக்குத் தேவையில்லை”

தன்னுடைய எழுத்துக்கள் யாருக்கு என்பதில் பஷீர் தெளிவாக இருந்தார். அதனால் தான் தன்னுடைய புத்தகங்கள் மிகக் குறைந்த பக்கங்களில் மிகக்குறைந்த விலையில் இருக்குமாறு பார்த்துக் கொண்டார். எழுத்துக்கள் எளிய மக்களின் பேச்சு வழக்கில் இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் கொண்டார். இலக்கியம் என்ற பெயரில் தன் புத்தகத்தில் அதிக திருத்தம் செய்வதையும் அவர் அனுமதிக்கவில்லை.

பஷீர்ன் நாவல்கள் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவை திரைப்படமாகவும் வெளிவந்தன. அதன் திரைக்கதையையும் பஷீரே எழுதினார். அதிலும் சில திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றன. தான் வாழ்ந்த காலம் வரையிலும் பெரும் எழுத்தாளராக, சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு மனிதனாக, அனுபவங்களை தேடி பயணப்பட்ட ஒரு பயணியாக கேரள மக்களால் பேப்பூர் சுல்தானாக வாழ்ந்த பஷீரின் வாழ்க்கையை தெளிவாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.

நூல்: காலம் முழுதும் கலை- ஈ.எம்.அஷ்ரப்
தமிழில் : குறிஞ்சிவேலன்


கிழக்கு பதிப்பகம்,
33/15, எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை,
சென்னை-18
பக்கம்: 183
விலை: ரூ.75

நன்றி: தீம்பாவை
              கீற்று இணையம்

கருத்ததொரு வரலாற்றின் பதிவு- நாடக விமர்சனம்

எஸ்.கருணா


இதுகாறும் நாம் கண்டும், கேட்டும், பழகியும் வந்த புராண இதிகாசங்கள், பழங்கதைகள், மரபுவழிக்கதைகள் என அனைத்தையும் மறுவாசிப்புக்கு உட்படுத்த வேண்டியது பண்பாட்டுத் தளத்தில் பணியாற்றுகிறவர்களின் கடமையாக சமூகம் முன் வைத்துள்ளது. பாட்டன் பூட்டன் காலத்திலிருந்து கேட்டு வந்திருக்கிற இத்தகைய கதையாடல்கள் மீது புதிய வெளிச்சத்தை பாய்ச்சுவதும், மறு விசாரணை நடத்துவதும், அதன் மரபு அடுக்குகளில் மறைந்திருக்கிற அல்லது திட்டமிட்டு மறைத்து வைக்கப்பட்டிருக்கிற பேருண்மைகளை, புறக்கணிப்புகளை, இருட்டடிப்புகளை வெளிக்கொண்டுவரும்.


இத்தகைய மறுவாசிப்புக்குட்படுத்தும் நடவடிக்கைகள், இதுவரையிலான நமது நம்பிக்கைகளின் மீது அதிர்வுகளை ஏற்படுத்தி புதிய கேள்விகளை எழுப்புவதன் மூலம், புதிய சாளரங்களை திறந்து வைக்கவும் உதவுகிறது. ஏற்கனவே, இதுபோன்ற மறுவாசிப்பு முயற்சிகள், கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் என பல்வேறு துறைகளிலும் குறிப்பிடத்தக்க அளவில் அரங்கேறியிருக்கின்றன. அந்த வகையில் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உபபாண்டவம்' ஒரு காத்திரமான முயற்சியாக தமிழில் வந்திருந்தது.

தமிழ் நாடகத் துறையில் முக்கிய பங்களிப்பாற்றியிருக்கிற, சென்னை கலைக்குழுவின் தலைவரும் இயக்குனருமான ‘பிரளயன்' இயக்கத்தில் அரங்கேற்றப்பட்ட ‘உபகதை' நாடகம் மறுவாசிப்பின் புதிய எல்லைகளையும் ருசியையும் நமக்கு தீவிரமாக அறிமுகப்படுத்தியது. அதன் நீட்சியாக இம்முறை பிரளயன், கையில் எடுத்திருப்பது தமிழ்க்குலத்தின் கருத்த வரலாற்றை. பறம்பு மலையின் மன்னன் பாரியின் கதையை ‘பாரி படுகளம்' என்ற பெயரில் மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார் பிரளயன்.


புதுவை பல்கலைக்கழகத்தின் நாடகவியல் துறைக்காக, அம்மாணவர்களின் பங்களிப்புடன் தயாரித்து அரங்கேற்றப்பட்ட ‘பாரி படுகளம்', தமிழ் நாடக உலக வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது என உரக்கப் பேசலாம். மூவேந்தர்களின் பெருமை நாமறியாததல்ல. அதுவும் தமிழக அரசியல் தளத்தில் அவ்வப்போது இவ்வேந்தர்களின் வாரிசுகளாக தங்களை அடையாளப்படுத்தி புளகாங்கிதம் அடைந்து கொள்ளும் தலைவர்களையும் தமிழகம் ‘தேமே' எனப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

மூவேந்தர்களின் காலம் பொற்காலம் என்றும், தேனாறும் பாலாறும் அந்தக் காலத்தில் ஓடியதாகவும், கரைகளின் இருபுறமும் மக்கள் உட்கார்ந்து மொண்டு, மொண்டு குடித்து வந்ததாகவும் எழுந்த கனவுச் சித்திரங்களை இந்த நாடகத்தின் சில காட்சிகள் கலைத்துப் போடுகின்றன. கடவுளையும், தமிழையும் தமிழ்க்குடிகளையும் ரட்சித்தும் காத்தும் வந்த குற்றம்காண முடியாத குணபுருஷர்களாகவும் தமிழ்க்குல வரலாற்றின் ஆகச் சிறந்தவர்களாகவும் கட்டமைக்கப்பட்ட மூவேந்தரின் பிம்பங்களை இந்த நாடக மாந்தர்கள் போட்டுடைத்து அதிர்வுகளை ஏற்படுத்துகிறார்கள்.

‘முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி' என்ற வரிகளை யோசித்துக்கூட பார்க்க முடியாதவகையில் புளகாங்கிதம் அடைந்து கிடக்கும் தமிழ்க் குடிகளின் முன்பு, அந்த வரிகள் கற்பனைதானே தவிர, அதை நம்பி மூவேந்தர்களும் முட்டாள்களாகி சண்டைக்கு வந்து விட்டார்களே என அங்கவையும், சங்கவையும் எள்ளி நகையாடும் காட்சி ‘சுர்ர்' என உறைக்கிறது. காடும் மலையும் பாறைகளுமாக உள்ள ஒரு மலையின் நிலப்பரப்பில் ‘தேர்' ஓடக்கூடிய அளவிற்கு சமமான பாதை எப்படி இருந்திருக்க முடியும்? என்ற கேள்வியை நாடகத்தின் ஊடே பார்வையாளர்களின் மூளை எழுப்பிப் பார்த்து தனக்கு தானே தலையில் குட்டு வைத்துக் கொள்கிறது.

பறம்பு மலையை ஆண்ட ‘பாரி' மன்னனின் வாழ்வையும், மன்னனுக்கும், மக்களுக்கும் இருந்த நேச உறவையும், மலைக்குடிகள் என தரக்குறைவான நோக்கத்தில் அழைக்கப்பட்ட அம்மக்களுக்கு தங்கள் மலையின் மீதும், மரங்களின் மீதும், வனத்தின் மீதும் இருக்கும் ஒப்பற்ற அன்பையும், காட்சிகளாக பதிவு செய்திருக்கிறது நாடகம். பாரி மன்னனை வீழ்த்த மூவேந்தர்களும் செய்யும் சதியாலோசனையும், வெற்றி பெற்ற பிறகு பறம்பு மலையை பங்கிட்டு கொள்வது பற்றி அவர்கள் நடத்தும் பங்கீடு காட்சியும், மண் பிடிப்பதிலும், பெண் பிடிப்பதிலும் அவர்களுக்கிருந்த வேட்டை மனசின் வெறியை துல்லியமாகப் படம் பிடிக்கிறது.

நாடகத்தின் பல காட்சிகளும், வசனங்களும் சமகால அரசியலை ஆங்காங்கே ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. ‘கூட்டுப்படைத்தளபதி' என்ற சொல்லாடலும், மூவேந்தர்களின் கூட்டுப்படைகளும் முகமூடி அணிந்த திருடர்களைப் போல பறம்பு மலையை ஆக்ரமிப்பதும் பேராசிரியர் ரவீந்திரனின் ஒளியமைப்பில் அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. சின்னஞ்சிறு நாடான ‘ஈராக்' மீது அமெரிக்க-இங்கிலாந்தின் கூட்டுப்படைகள் நடத்திய ஆக்ரமிப்பும், தாக்குதலும், அந்த அரசியலும், இந்த நாடகத்தின் காட்சிகளில் எதிரொலிப்பதை துல்லியமாகப் பதிவு செய்கிறது நாடகம். சிறிய மலைநாடான பறம்புவைப் பிடிக்க மூவேந்தர்களும் செய்யும் சதிகளினூடே ஜார்ஜ் புஷ்ஷின் முகமும், டோனி பிளேரின் முகமும், நமது நினைவுக்கு வந்து போவது இந்த நாடகத்தின் மைய இழைக்கு நெருக்கமாக நம்மை கொண்டு செல்கிறது.

‘பெருங்குடி' வேந்தர்களான தங்களை விட ‘சிறுகுடி' மன்னனான பாரியின் புகழ் உயர்ந்து கொண்டே போவதை தாங்கிக் கொள்ள முடியாத ‘பெருங்குடி' மனத்தின் அடுக்குகளை, அழுக்குகளை நாடகக் காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக திறந்து காட்டுகின்றன. ‘சிறுகுடி'களை அழித்தொழிக்கும் ‘பெருங்குடி'களின் வர்ணாசிரமச் சூதாட்டத்தின் பகடை காயாக்கப்பட்டு ‘பாரி' மன்னன் வீழ்த்தப்பட்ட கதையை நாடகம் அதன் போக்கில் சொல்லிக் கொண்டே சென்று முடிகிறது.

படுகளத்தில் அம்புகளுடன் வீழ்ந்து கிடக்கும் பாரி, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற ‘பெரியார்' சொல் கேட்டு தவறா? என்று எழுப்பும் கேள்வியும், ‘தமிழால் ஒன்றுபடுவோம்' என்று முன் வைக்கும் யோசனையும், நூற்றாண்டுகளைக் கடந்தும் இன்னும் ஒலிப்பதை நாடகம் பார்வையாளர்களுக்கு மௌனமாய் சுட்டிக் காட்டி நிறைவடைகிறது.


ஒன்றே முக்கால் மணி நேரம் நடிக்கப்பட்ட இந்நாடகம் பாரி வாழ்ந்த காலத்திற்கே நம்மை அழைத்துச் செல்லும் விதத்தில் தமிழ் அடையாளங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டதே இதன் சிறப்பம்சமாகும். ‘முல்லைப் பண்'ணில் தொடங்கி, நடுகல் வழிபாடு, வீரர் வணக்கநாள், பாணர்களின் பாடல், ஆட்டம், ஆணும்பெண்ணும் கூடிக் கள்ளுண்பது, அங்கவை சங்கவையின் பன்முகத் திறன்களை வெளிப்படுத்தும் காட்சிகள், கூட்டுப்படை வீரனுடன் ஒண்டிக்கு ஒண்டியாக கத்திச் சண்டை போட்டு வீழ்த்தும் மலை நாட்டுப் பெண், வன உயிர்களை தன்னுயிர்களாக நேசிக்கும் மலை மக்களின் மனம், மலைவளங்களை வணிகத்தின் வேட்டை காடாக்க மறுக்கும் பாரியின் மனம், மூவேந்தர்களின் ‘பெருங்குடி' பெருமிதம் என எல்லாவற்றையும் மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் பிரளயன்.

நாடகத்தின் முழு வண்ணமும் மலையின் ‘செம்மண்' வண்ணத்திலேயே இருந்தது நம்மை காட்சிகளோடு ஒன்றிவிட வைக்கிறது. நாடகம் முழுவதும் ஒரு நடிகனைப் போலவே ஒளியமைப்பும் ஒரு பாத்திரமாகி நாடகம் முழுவதும் தொடர்கிறது. தனது ஒவ்வொரு படைப்புகளிலும் கண்ணுக்கு சட்டென புலப்படாத அரசியல் கண்ணிவெடிகளை புதைத்து வைத்திருப்பார் பிரளயன். இந்த நாடகத்திலும் அது தொடர்வதையும், அவை வெடிக்கும்போது பார்வையாளர்கள் அதிர்வதையும் அரங்கில் காணமுடிந்தது.

புதுவை பல்கலைக்கழகத்தின் தயாரிப்பில், 35 நாட்கள் உழைப்பில் பிரளயன் உருவாக்கிய இந்நாடகத்தில் இலங்கை, வங்கதேசம் போன்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் நல்ல தமிழில் பேசி நடித்ததை குறிப்பிட வேண்டும்.

நாடக அரங்கில் எழுத்தாளர் பிரபஞ்சன் சொன்னதைப் போல 2000 ஆண்டுகால தமிழ் வரலாற்றில், முதன் முதலாக முழுமையாக வந்திருக்கிற தமிழ் நாடகம் இது.

பின்குறிப்பு: அங்கவை, சங்கவை என்ற பாரி மகளிரை தனது படத்தில் கேவலமாக சித்தரித்த இயக்குனர் ஷங்கரும், அதற்கு வாயைப் பிளந்து சிரித்தபடி ‘தமிழ்ப்பணியாற்றி' துணைபோன பாப்பையா வகையறாக்களும் தங்கள் வாழ்வில் ஒரு முறையாவது இந்த நாடகத்தை எங்காவது பார்த்து, சாப விமோசனத்தை தேடிக் கொள்வார்களாக...

- எஸ்.கருணா
நன்றி:கீற்று

குஜராத் 2002 இனப்படுகொலை - ‘தெகல்கா’ புலனாய்வு முழு தொகுப்பு

தமிழில்: அ.முத்துகிருஷ்ணன்


நூலிலிருந்து:


‘தெகல்கா’ புலனாய்வு உண்மைகள் வெளிவந்ததும் உலகம் முழுவதிலிருந்தும் குடிமைச் சமூகத்தின் குரல்கள் உருப்பெறத் தொடங்கின. உயிரைப் பணயம் வைத்து ஆறு மாதங்கள் புலனாய்வை மேற்கொண்ட ஆஷிஷ் கேத்தன் மற்றும் ‘தெகல்கா’ குடும்பத்தினருக்கு-வழக்கறிஞர்கள், சட்ட நிபுணர்கள், எழுத்தாளர்கள், போராளிகள் என பெருங்கூட்டம் பாராட்டுகளை தெரிவித்தது. நம் காலத்தின் உண்மையான நாயகர்களாக இவர்கள் திகழ்கிறார்கள். ஆம், அதிகாரத்துக்கு எதிராக கலகம் செய்யும் வீரர்கள்.

வேறு வகையில் பார்த்தால், இது யார் செய்திருக்கவேண்டிய வேலை? 2002 பிப்ரவரி இறுதியில் இனப் படுகொலை நடத்தப்பட்டது. அடுத்த ஆறுமாத காலத்தில் விசாரணைகள் நிகழ்ந்து, மறு விசாரணையும் நடந்து நவம்பர் 2003 வாக்கிலாவது அரசாங்கம் தனது தீர்ப்பை வழங்கியிருக்க வேண்டும். இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள வாக்குமூலங்களை குஜராத் காவல் துறை அல்லவா பெற்றிருக்க வேண்டும்? இது போன்ற இனப்படுகொலைகளை செய்து வரும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். மறுபுறம் ‘பண்பாட்டுக் காவலர்’களைப் போல வலம் வருகின்றன. குருதி தோய்ந்த கரங்களால் கடவுளைத் தொழுதல், தேர்தலில் முழக்கமிடுதல் என ஒப்பனைகள் கச்சிதமாய் தொடர்கின்றன.

இவ்வளவு கொடூரங்கள் ஆதாரங்களுடன் வெளிவந்த பிறகும், மீண்டும் நரேந்திரமோடி வெற்றி வாகை சூடி பதவியில் அமர்ந்திருக்கிறார். இதில் வியப்படைவதற்கு ஏதும் இருக்கிறதா? எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது. மதவாதத்தை கொள்கையாகக் கொண்டவர்கள், குஜராத் சமூகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக தங்கள் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த அதற்கான சூழலை உருவாக்கி வருகிறார்கள். பால்வாடிகள், பள்ளிகள், கல்லூரிகள், கோயில்கள், மருத்துவமனைகள் என அவர்களின் கரங்கள் நுழையாத இடமேயில்லை. 1985 முதல் நரோடாவிலும் கேதாவிலும் ஆயுதப்பயிற்சியளிக்கும் ‘ஷாகா’க்களை ஆர்.எஸ்.எஸ்.தொடர்ந்து நடத்தி வருகிறது. லத்தி கம்புகளை எறிந்துவிட்டு அவர்கள் தானியங்கி துப்பாக்கிகளை கையில் பிடித்தும் இருப்பது ஆண்டுகள் ஆகிவிட்டது.

தொடர்ந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்த வன்ம முகாம்களில் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். அடுத்த கட்டமாக இந்த முகாமில் பங்கு கொண்டவர்கள், குஜராத் அரசின் பல்வேறு துறைகளிலும் பணியில் அமர்த்தப்பட்டார்கள். இந்த பிரதிகள் வரும் பலரும் இந்த முகாம்களின் அங்கத்தினரே ஆயுதங்களை வழங்கும் காவல் துறையினர், கொலைகாரர்களுக்கு ஆதரவாக செயல்படும் அரசு வழக்கறிஞர் எனப் பல வேடங்களை அவர்கள் ஏற்றிருக்கிறார்கள். இந்த மரண வியாபாரிகளுக்கு இந்திய முதலாளிகள் பக்கபலமாய் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அம்பானி, ரத்தன் டாடா என இப்பெரும்படை மோடியுடன் அளவளாவியதை நாம் தொலைக்காட்சிகளில் கண்டோம். ஆர்.எஸ்.எஸ்.க்கு பெரும் நிதி வழங்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும், இந்திய முதலாளிகளுக்கும் ‘தெகல்கா’ தனியான திரையிடலை ஏற்பாடு செய்யலாம்.

சமூகத்தில் விதைக்கப்பட்டுள்ள இந்த நஞ்சை எப்படி அப்புறப்படுத்துவது? தேர்தலுக்குத் தேர்தல் பா.ஜ.க.வை உக்கிரமாய் எதிர்த்து முழக்கம் போட்டால், மதவாதம் அழிந்துவிடுமா? மதவாத எதிர்ப்புப் பிரச்சாரம் ஊடக புகைப்பட வெளியீட்டால் நிறைவுறுமா? மதச்சார்பின்னை பேசுகிறவர்கள் மதவாதத்தை மிகவும் தட்டையாகப் புரிந்து கொண்டுள்ளார்களா? மதவாதத்தை எதிர்ப்பதற்கான பண்பாட்டுத் தளத்திலான வேலைத் திட்டம் ஏன் உருவாக்கப்படவில்லை? கே.என்.பணிக்கர், ராம் புன்யானி போன்று மனதின் அடியாழத்திலிருந்து தொடர்ந்து பேசுபவர்களின் வார்த்தைகளை நாம் வீணடித்து விட்டோமா? சாதி ஒழிப்பில் முனைப்பில்லாததால் தான் மத எதிர்ப்பை பெயரளவில் நிறுத்திக் கொள்கிறோமா? எத்திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் நாம்?

மத வெறியின் ஆபத்தை உணராத பெரியாரின் வழித்தோன்றல்களாக கருதிக்கொள்ளும் திராவிடக் கட்சிகள், கூச்சநாச்சமின்றி மாறி மாறி பா.ஜ.க.வை தோளில் சுமந்து தமிழகத்தில் வளர்ப்பது சரிதானா?

இந்தப் பிரதிகள் தமிழகத்தின் எதிர்காலம் குறித்த அக்கறையுடன் தான் துரிதமாக மொழியாக்கம் செய்யப்பட்டது. மதவெறியின் உண்மை முகத்தை நேரில் காணும் அரிய வாய்ப்பு மீண்டும் நமக்கு கிடைத்திருக்கிறது. காலம் கனிந்து கொண்டிருக்கிறது. இந்தப் பிரதிகளில் கம்பீரமாய் வலம் வரும் பேராசிரியர் பன்துக்வாலா, காவல் துறை உயர் அதிகாரி ஆர்.பி.சிறீகுமார் ஆகியோர் நம்பிக்கையின் தூதர்களாகத் திகழ்கிறார்கள். இஷான் ஜாப்ரியின் துணைவி சக்கியா ஜாப்ரி, ‘தெகல்கா’ பதிவுகளுடன் உச்ச நீதிமன்றத்தின் கதவுகளை தட்டிக்கொண்டிருக்கிறார். இமயமலையில் பாறைகள் உருண்டதாக வெளிவந்த பத்திரிகைச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு, வழக்கை தானே தாக்கல் செய்யும் உச்சநீதி மன்றம், ‘தெகல்கா’ புலனாய்வு மீது தன் பார்வையை பதிக்குமா? கோத்ராவில் இனப்படுகொலை செய்யப்பட்ட 2000 முஸ்லிம்களின் குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அகதிகளாக வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட 2 லட்சம் முஸ்லிம்களின் வாழ்க்கை மீட்டெடுக்கப்பட வேண்டும்.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க - http://www.anyindian.com/product_info.php?products_id=213001

வெளியீடு: வாசல் பதிப்பகம்

402, முதல் தெரு, வசந்த நகர்,
மதுரை-625003.
செல்: 9842102133




தலித் முரசு
203, ஜெயம் பிரிவு, சித்ரா அடுக்ககம்
9,சூளைமேடு நெடுஞ்சாலை,
சென்னை-600094.
பேசி:044-23745473

நன்றி:கீற்று

இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்?: தடை செய்யப்பட்ட நூல்


நூலின் முன்னுரையிலிருந்து...


பெரியார் இன்னும் முழுமையாக அறியப்படாத மனிதராக இருக்கிறார். அவரை தங்களவராக சொந்தம் கொண்டாடியிருக்க வேண்டிய கம்யூனிஸ்ட்டுகள், வறட்டு நாத்திகர் என்றும் நிலபிரபுத்துவவாதி என்றும் ஜனநாயகம் மறுத்த சர்வாதிகாரி என்றும் புறம் தள்ளி அவதூறு சேறு பூசியதை தமிழகத்தின் கெட்டகாலம் என்றுதான் சொல்ல வேண்டும்.

தாஷ்கண்டில் (1922) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு, கான்பூரில்(1925) முதல் மாநாடு கூட்டினாலும் தமிழகத்தில் அந்த கொள்கையை அறிமுகப்படுத்தும் அடிப்படை வேலைகளுக்கு ஆரம்பமாக இருந்தவர் பெரியார்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டதில் தொடங்கி, சோவியத் பூமி பற்றிய நிலவரத்தை அறிமுகப்படுத்தியது வரையிலான (1930-1935) தொடக்க நிலை ஆண்டுகள், கம்யூனிஸ்ட் கட்டுமானத்தை தமிழகத்தில் நிலைநிறுத்த பெரியாரின் முக்கிய பங்களிப்பானது. எடுத்துப் பார்த்துக் கொள்ள மூலப்புத்தகம் எதுவும் இல்லாத சுயசிந்தனையாளரான பெரியாரின் அருகில் இருந்து வசப்படுத்தாமல், விலகி நின்று விமர்சனங்களை செய்ததன் விளைவு கம்யூனிஸ்ட் இயக்கமும் பெரியார் இயக்கமும் வேறுவேறு திசையில் பயணித்தது.

ஆனாலும் பெரியார், கம்யூனிஸ்ட் அடிப்படை தத்துவங்களுக்கு முரணாக வாழ்நாளில் எந்தக் கட்டத்திலும் பயணிக்கவில்லை. இயக்கம் காத்து, தத்துவத்தை முன்னெடுக்கலாம் என்று பெரியார் 1935 இல் சொன்னதை, இருபதாண்டுகள் கழித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பின்பற்றியது வரலாறு.

பெரியாரின் இயக்கத்தை சுயநல மரியாதையாகவும், பரந்துபட்ட இடதுசாரி சூழ்ச்சியாகவும் காட்ட முயற்சிக்கும் விமர்சனங்களின் பின்னால் இருக்கும் சுயநலத்தையும், சூழ்ச்சியையும் தான் தேர்தலுக்கு தேர்தல் நாடு பார்த்து வருகிறது. ஆனாலும் கடந்த சில ஆண்டுகளாக அனைத்து கம்யூனிஸ்ட் இயக்கங்களும் பெரியாரை தங்களது நெருங்கிய சக்தியாக ஏற்று வருவது வரவேற்கத்தக்க மாற்றம்.

இப்படியொரு சூழலில் பெரியாரின் ‘இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்’ என்ற கட்டுரை மீண்டும் வெளியே வருகிறது.

பெரியார் சோவியத் சென்று வந்த பின்னால், அவரது ஒவ்வொரு அசைவையும் பிரிட்டிஷ் அரசு கண்காணித்தது. ‘குடிஅரசு’ இதழில் தனது எண்ணங்களை, சுற்றுப் பயணத்தை, பேச்சை மறைக்காமல் பெரியார் வெளியிட்டு வந்தது அரசுக்கு வாய்ப்பாக அமைந்தது. அவை முழுமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு மேலிடத்துக்கு அனுப்பப்பட்டு வந்தன. இன்னும் அமைப்பு ரீதியாக, தமிழகத்தில் முழுமையாக கட்டமைக்கப்படாத கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக செல்வாக்குமிக்க தலைவராக இயங்கிய பெரியார் பிரச்சாரகராக மாறிக் கொண்டிருப்பதை தட்டி வைக்க நினைத்த அரசு, அவரது எழுத்துகளுக்கு தடை போடலாம் என்று முதல் முடிவு எடுத்தது.

“இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்” என்ற தலையங்கம் ‘குடி அரசு’வில் 29.10.1933-ல் வெளியானது. இன்றைய அரசாங்கம் பணக்காரர்களுக்கு சார்பாக இருக்கிறது. பொதுமக்களிடமிருந்து வரியாக வசூலிக்கப்படும் பணம் கூட இவர்களுக்கு தான் பயன்படுகிறது, கல்வித் துறையில் பணியாற்றும் உயர்சாதியினர் ஊதியம் என்ற பெயரால் இந்த வரிப்பணத்தை வாங்கிச் சென்று விடுகிறார்கள் - என்று இந்த தலையங்கத்தில் பெரியார் குற்றம் சாட்டினார். ஏழைகளிடம் வசூல் செய்த பணத்தை பணக்காரர்களும், பதவியில் இருப்பவர்களும் பிரித்துக் கொள்ளும் இந்த அமைப்பு முறைக்கு, ‘கூட்டுக் கொள்ளை ஸ்தாபனம்’ என்று பெயரும் கொடுத்தார். இந்த ஒன்றுக்காவது இன்றைய ஆட்சியானது அழிக்கப்பட வேண்டியது என்று தீர்ப்பும் சொன்னார்.

இந்த தலையங்கம் அரசு துவேஷம் என்ர பெயரால் பெரியார் மீது பாய காரணமானது. எழுதியவர் என்ற முறையில் பெரியாரும் ‘குடிஅரசு’ வெளியீட்டாளர் என்ற அடிப்படையில் (பெரியாரின் தங்கை) எஸ்.ஆர்.கண்ணம்மாவையும் கைது செய்தார்கள்.

இதன் தொடர்ச்சியாக நடந்த விசாரணையும் பெரியார் எம்மாதிரியான எதிர் வினையாற்றினார் என்பதும் உணர வேண்டியவை. அவருக்கு இந்த கைது நடவடிக்கை மனதளவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதைவிட, என்னைப் போன்ற மனிதர்களை சிறைக்குள் ‘சாமி’ மாதிரி கவனித்துக் கொள்கிறார்கள் என்று வெளியே வந்து சொன்னது ஆச்சர்யமானது. சிரமப்பட்டதாக அவர் கதை சொல்லவில்லை.

பெரியார் அப்போது கைதானது ஏழாவது தடவை என்று பட்டியலிட்டது ‘குடி அரசு’. இப்படிப்பட்ட அரிய தகவல்கள் அனைத்தும் பெரியார் நடத்தி வந்த ‘குடி அரசு’ இதழ்களில் இருந்து முழுமையாக எடுத்தாளப்பட்டது.

ஆசிரியர்: ப. திருமா வேலன்

வெளியீடு: ‘தென் திசை’-வெளியீடு
கேகே புக்ஸ் பி.லிட்.,
19, சீனிவாச ரெட்டி தெரு(முதல் தளம்)
தியாகராயர் நகர், சென்னை-17

நன்றி: கீற்று இணையம்

வெள்ளி, 30 அக்டோபர், 2009

யூமா வாசுகியிலிருந்து சமுத்திரம் வரை


வெங்கட் சாமிநாதனின் 39 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலானவை புத்தக விமர்சனங்கள்.


"யூமா வாசுகியிலிருந்து சமுத்திரம் வரை - மேலோட்டமாகப் பார்க்கையில் புத்தக விமர்சனங்களாய் இருந்தாலும், அடியாழத்தில் தமிழ்நாட்டின் சமூக விமர்சனமாகவும் அமைகிறது. குறிப்பிட்ட தத்துவத்தின் அடிப்படையில் தம்மை வடிவமைத்துக் கொண்டதாய் பிரகடனம் செய்பவர்களிடம், அந்தத் தத்துவத்திற்கு சம்பந்தமே இல்லாத அல்லது தத்துவத்தைப் புரட்டிவிடுகிற படைப்பாற்றல் வெளிப்படுகிற ஆச்சரியத்தை நுணுக்கமாய்ப் பதிவு செய்கிறார் வெங்கட் சாமிநாதன். அவர்கள் மேற்கொண்ட தத்துவத்துடன் தான் உடன்பாடு கொள்ள முடியாததால், அவர்களின் படைப்பாற்றலைப் புறக்கணிக்கிற செயலை என்றுமே வெங்கட் சாமிநாதன் செய்வதில்லை என்பதுதான் வெங்கட் சாமிநாதனின் ஆளுமையின் அடையாளம். அந்த நேர்மை இலக்கிய சமூக உலகில் ஒவ்வொருவரும் கைக்கொள்ள வேண்டிய ஒன்றாகும்" என்று பதிப்புரையில் எழுதுகிறார் கோபால் ராஜாராம்.

இக்கட்டுரைகள் கடந்த 40 வருடங்களாக அவ்வப்போது பத்திரிகைகள் கேட்க எழுதியவை என்று முன்னுரையைத் தொடங்குகிறார் வெ.சா. "இதுதான் என் தமிழ்நாடு. இங்கு நான் தொகுத்துள்ளவை அந்தப் புத்தகங்களைப் பற்றி மாத்திரம் சொல்வன அல்ல. என் சமூகத்தைப் பற்றியும் மக்களைப் பற்றியும் சொல்லும். அதுதான் எனக்கும், என் நாட்டுக்கும் மக்களுக்கும் இந்த எழுத்துக்களுக்கும் நான் செய்து கொள்ளும் நியாயம்" என்று முன்னுரையை முடிக்கிறார்.

நூலாசிரியர்:வெங்கட் சாமிநாதன்

பதிப்பாளர்: எனிஇந்தியன்
பக்கங்கள்: 232
விலை: உருவா.120.00

புதன், 28 அக்டோபர், 2009

பேசாத பேச்செல்லாம்


தமிழ்ச் செல்வனின் இக்கட்டுரைகள் இதயத்தின் அடியாழத்தில் உறைந்த நினைவுகளை மீட்பவை. அந்தரங்கத்தின் அறைகளை திறப்பவை. கடக்க முடியாத குற்ற உணர்வும், கடக்க முடியாத துயரமும் இக்கட்டுரைகளை ரகசிய விசும்பல்களாகவும் ஒரு ரணத்தை அந்தரங்கமாக திறந்து பார்க்கும் செயலாகவும் மாற்றுகின்றன.

நூலாசிரியர்: ச.தமிழ்செல்வன்
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்,
விலை: 80.00 உருவா, இந்தியாவிற்கு வெளியே: 175.00,
வெ.ஆண்டு: டிசம்பர். 2007,
ISBNNumber : 978-81-89912-31-4

கன்யாவனங்கள்


70களுக்குப் பின் அரபு நாடுகளின் புதிய எண்ணெய் வளங்கள் உருவாக்கிய வேலை வாய்ப்புகளைத் தேடி மூன்றாம் உலக நாடுகளிலிருந்து ஏராளமானோர் புலம் பெயர்ந்து சென்றனர். அவர்கள் பாலை நிலத்தின் கடும் போராட்டங்களும் நவீனத்துவத்தின் வசதிகளும் மத ரீதியான சமூக அரசியல் அமைப்பின் கெடுபிடிகளும் நிறைந்த ஒரு புதிய எதார்த்தத்தை எதிர்கொண்டனர். இந்த எதார்த்தத்தினூடே மனித ஆசாபாசங்களின், ஒடுக்கப்பட்ட கனவுகளின், தீர்க்கமுடியாத பெருமூச்சுகளின் கேவல்களையும் வன்மங்களையும் சித்தரிக்கிறது கன்யாவனங்கள். செல்வமும் காதலும் காமமும் பாவமும் ஆபத்துகளும் சூழ்ந்த ஒரு உலகத்தின் வசீகரத்தையும் இருளையும் இந்நாவலில் சித்தரிக்கிறார் புனத்தில் குஞ்ஞப்துல்லா. முன்னணி மலையாள நாவலாசிரியரான புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் புகழ்பெற்ற படைப்பு இது.

ஆசிரியர்: புனத்தில் குஞ்ஞப்துல்லா
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்,
விலை: உருவா: 85.00 இந்தியாவிற்கு வெளியே: 190.00
வெ.ஆண்டு: டிசம்பர்.2007
ISBNNumber : 978-81-89912-41-3

நன்றி:உயிர்மை

மரணத்தின் வாசனை


போர் தின்ற சனங்களின் கதை


அதிகாரத்தின் பெருவாய் அப்பாவிகளின் உயிர் குடிக்க அலைகிறது. பிணங்களும் ரணங்களுமே இன்றைய ஈழத் தமிழனின் சொத்து. களமாடிச் சவமாகிக்கிடக்கும் தமிழச்சிகளின் பிணங்களைப் புணரும் சிங்களப் பேரினவாதத்தின் கொடூரம், ஹிட்லரின் நாஜிப் படையும் செய்யத் துணியாதது. இந்த உண்மைகளை வலியோடு பேசுகிறது த.அகிலனின் ‘மரணத்தின் வாசனை’ புத்தகம்.

-ஆனந்த விகடன்



இரண்டாம்பதிப்பு ஓவியர் ட்ராஸ்கி மருதுவின் ஓவியங்களோடு வெளியாகியிருக்கிறது.

த.அகிலன்

வடலி வெளியீடு
முதற்பதிப்பு 2009 ஜனவரி
இரண்டாம்பதிப்பு 2009 மே
ISBN: 978-81-908405-3-8
நன்றி:வடலி

நக்சலைட் அஜிதாவின் நினைவுக் குறிப்புக்கள்..


அஜிதா - அரசியலில் தீவிரமாகச் செயற்பட்டு வந்த மந்தாகினி நாராயணன் - குன்னிக்கல் நாராயணனின் மகளாக 1950 ல் கோழிக்கோட்டில் பிறந்தார்.சமூகவியலில் முதுகலைப்பட்டம் பெற்றவர்.1968 முதல் 81 வரை நக்சலைட் இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார்.புல் பள்ளி காவல் நிலையத்தின் மீது தாக்குதல் தொடுத்த வழக்கில் 1968 லிருந்து 77 வரை சிறைத்தண்டனை அனுபவித்தவர். தற்போது அனேஷி வுமன் கௌன்சலிங் சென்டரிங் தலைவராக உள்ளார்.


எதிர் வெளியீடு

பக்கங்கள் 432
தமிழில்:குளச்சல் மு.யூசுப்

"ஈழம்: இனப்படுகொலைகளுக்குப் பின்னால்"


வன்னி மக்கள் மீது சிறீலங்கா அரசு நடத்திய கொடூர தாக்குதல்கள் வெற்றி பெற்றவர்களின் சாகசங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. மிக குறுகிய காலப்பகுதிக்குள் சுமார் 60 ஆயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். வன்னி மக்களை மீட்டு சுதந்திரமளிப்பதற்காக என்ற பெயரில் சிறீலங்கா அரசு நடத்திய மிகக்கொடூரமான இராணுவ தாக்குதலின் முடிவில் வதைமுகாம்களுக்குள் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறார்கள் 3 இலட்சம் தமிழ் மக்கள். வன்னி மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை உலகின் அதிகார மையங்களின் எல்லா கண்களும், கைகளும் வேடிக்கை பார்த்தன. வன்னிப் படுகொலைகள் திடீரென்று உருவானவையல்ல.




"ஈழம்"


இனப்படுகொலைகளுக்குப் பின்னால்
ஆசிரியர்.யோ.திருவள்ளுவர்

வெளியீடு: ஆழி பதிப்பகம்

பக்கங்கள் : 176



இந்நூல் கடந்த பத்து ஆண்டுகளின் ஈழப் போராட்ட அரசியலில் ஏற்பட்ட போர், போர் நிறுத்தம், சமாதான முயற்சிகள், படுகொலைகள், வன்னிப் படுகொலைகளின் துயரங்களையும், பேரழிவையும் விரிவாக பதிவு செய்கிறது. சிங்கள பேரினவாதத்தின் தந்திர நாடகங்களை, பிராந்திய, உலக வல்லரசுகள் வகித்த பங்கை, ராஜதந்திர சதித்திட்டங்களை ஆதாரங்களுடன் விவரிக்கிறது. இந்திய-இலங்கை ஒப்பந்தம், சிறீலங்காவின் அரசியல் சட்டத்தின் 13வது திருத்தத்தின் ஏமாற்றுத்தனங்களையும், அவை உருவான பின்னணியையும் விவரிக்கிறது.

வடலி இணையக் கடையில் இந்நூல் விற்கப்படுகிறது. வடலியில் வாங்க இங்கே அழுத்துங்கள்


நூல் கிடைக்கும் இடங்கள்:

ஆழி பதிப்பகம்
12, பிரதான சாலை, யுனைட்டட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம், சென்னை- 600024
தமிழ்நாடு
தொலைபேசி: 91-44-4358 7585
மின்னஞ்சல்: aazhisales@gmail.com

நன்றி:ஆலமரம்

திங்கள், 26 அக்டோபர், 2009

சீனப் புரட்சி


நான்காயிரம் ஆண்டுகளாக அடக்குமுறையைத் தவிர வேறொன்றையும் அறிந்திருக்கவில்லை சீனா. வெகுண்டு எழுந்து சீனர்கள் போராட ஆரம்பிக்கும் ஒவ்வொரு சமயமும் அவர்கள் மிருகத்தனமாக ஒடுக்கப்பட்டனர். சன் யாட் ஸென்னுக்கு ஒரு கனவு இருந்தது. மன்னர் ஆட்சி ஒழியவேண்டும். ஆண்டான் அடிமை மனோபாவம் தகர்த்தெறியப்படவேண்டும். உழைக்கும் மக்களின் ஆட்சி அமையவேண்டும்.


சீனா ஒரு குடியரசாக மலர வேண்டும். சன் யாட் ஸென் கண்ட கனவு மாவோவால் மெய்ப்பிக்கப்பட்டது. "என் பின்னால் வா" என்று அந்தத் தேசத்தை தனக்குப் பின்னால் அணிதிரட்டிப் போராடினார் மாவோ. மக்களை உந்துசக்தியாகக் கொண்டு மாவோ நிகழ்த்திக் காட்டிய சீனப் புரட்சி அத்தேசத்தின் வரலாறை மாற்றியமைத்தது.

ஆசிரியர்: மருதன்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பக்கம்: 80         விலை: 25.00 உருபா

புத்தகங்களின் வரலாற்றிலிருந்து சமூக வரலாற்றைத் தேடி....தமிழ்ப் புத்தக உலகம் 1800 - 2009



புத்தகங்களின் வரலாற்றிலிருந்து சமூக வரலாற்றைத் தேடி....


புதிய புத்தகம் பேசுது இதழ் ஆண்டுதோறும் உலகப் புத்தக தினத்தை அறிவார்ந்த தளத்தில் கொண்டாடி வருகிறது. கடந்த ஆண்டு (2008, ஏப்ரல் 23) தமிழில் உள்ள முதன்மையான நூல்கள் குறித்து விவரணைகளும் சில முக்கியமான நூல்கள் தமிழ்ச் சமூகத்தில் எவ்வாறு வாசிக்கப்பட்டன என்பது குறித்தும் ஒரு சிறப்பு மலரை வெளியிட்டது. சமகால வரலாற்றுக்கான முக்கியமான ஆவணமாக அம்மலர் சிறக்கிறது. அதனுடைய தொடர்ச்சியாகவே ‘தமிழ்ப் புத்தக உலகம் 1800-2009’ என்னும் இம்மலர்....

தமிழில் புத்தக உருவாக்கம் என்பது காலனிய ஆட்சியாளர்களாலும் கிறித்தவ மதப் பாதிரியார்-களாலும் தொடங்கப்பட்டு, பின்னர் சுதேசிகளால் விரிவான தளத்தில் முன்னெடுக்கப்பட்டது. 16ஆம் நூற்றாண்டிலேயே அச்சு இயந்திரம் வந்த பொழுதும் 19ஆம் நூற்றாண்டில்தான் அது பெரிதும் பரவலாக்கப்பட்டது. இக்கால கட்டத்தில் புத்தக உருவாக்கம் இரு தளங்களில் நடைபெற்றது. ஓலைச்சுவடிகளில் இருந்த நூல்கள் பதிப்பிக்கப்பட்டு புத்தகமாக்கப்பட்டதுடன் அக்காலத்தில் எழுதப்பட்டும் புத்தகமாக்கப்பட்டன. இந்த புத்தக உருவாக்க முறைமை தமிழ்ச் சமூக வரலாற்றோடு எவ்வாறு ஊடுபாவாக வளர்ந்து வந்தது என்பதைக் காண வேண்டியுள்ளது.

புதிதாக உருவாகிவந்த தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுத்து ஒரு சமூகம் வளர்ந்த தன்மையை இப்புத்தக உருவாக்கத்திலிருந்து பெறமுடியும். குறிப்பாக புத்தக உருவாக்கத்தில் ஈடுபட்ட தனிநபர்கள், நிறுவனங்கள் ஆகியன குறித்தும் அதற்குப் பின்னால் இயக்கம் கொண்டுள்ள சமூக அசைவியக்கம் குறித்தும் நவீன வரலாறு பெரிதும் அக்கறை கொள்கிறது.

வெளியிடுவதற்காக நூல்களைத் தேர்வு செய்யும் முறைகள், தன்மைகள், நூலாசிரியர் பதிப்பாசிரியருக்கும், வெளியீட்டு நிறுவனங்களுக்கும் உள்ள உறவுகள், எத்தகைய வாசகரை மையம் கொண்டு நூல்கள் உருவாக்கப்பட்டன என்ற தகவல்கள், நூலாசிரியர்கள், பதிப்பாசிரியர்களுக்கு சமூகம் அளித்த முக்கியத்துவம், வெளியான நூல்கள் ஏற்படுத்திய சமூக விளைவுகள், வெளியான நூல்களின் மீதான சமூக அறவியல் பார்வைகள் ஆகியன இக்களத்தில் பெரிதாக விவாதிக்கப்பட வேண்டியன.

புலமைத் தளத்தில் நிகழ்ந்த நூலுருவாக்கத்திற்கு இணையாக வெகுசன தளத்திலும் நூல்கள் உருவாகி வந்தன. அதுகுறித்த ஆய்வுகளும் இதில் முதன்மை பெறுகின்றன. தமிழில் இதழ்களின் உருவாக்கமும் நூல்களின் உருவாக்கமும் அச்சுப்பண்பாடு என்ற ஒன்றைக் கட்டமைத்தன. அச்சுப்பண்பாட்டைப் புரிந்து கொள்ள நூல்கள் வெளியான முறைமைகள் குறித்தும் அதன் பின்னால் உள்ள தன்மைகள் குறித்தும் அறிய வேண்டியுள்ளது. அதற்கான தொடக்கமாகவே இதில் பதிப்பு தொடர்பான கட்டுரைகளுக்கு முதன்மை தரப்பட்டது. பதிப்புகளின் பன்மைத்துவத்தை விளக்கும் வகையில் தனிநபர் சார்ந்த பதிப்புகள் குறித்தும், துறைவாரியான பதிப்புகள் குறித்தும், காலவரிசையில் அதன் வளர்ச்சி குறித்தும் இதிலுள்ள கட்டுரைகள் விவாதிக்கின்றன. பதிப்புகள் குறித்த ஆய்வுக்கான மூல ஆவணங்கள் அருகி வருகின்ற சூழலில் கடின உழைப்பின் மூலம் நுட்பமான தரவுகளின் அடிப்படையில் இக்கட்டுரை ஆசிரியர்கள் ஆராய்ந்துள்ளனர்.

இதிலுள்ள கட்டுரைகளில் சில ஆவண ஆய்வாகவும், சில விவரண ஆய்வாகவும், சில விமரிசன ஆய்வாகவும், சில அறிமுக ஆய்வாகவும் அமைகின்றன. அனைத்துக் கட்டுரைகளிலும் அடிச்சரடாக இழையோடுவது நுட்பமான தரவுகளும் சமூக வரலாற்றுப் பின்னணியில் அவற்றை ஆராயும் தன்மையுமே எனலாம். தமிழ்ப் புத்தக உலகம் தொடர்பான அனைத்து விவரணைகளும் இதில் இடம்பெற்றுவிட்டதாகக் கூற முடியாது. சில விடுபடல்களும் உண்டு. இது ஒரு தொடர் ஓட்டம். மேலும் தொடரவேண்டிய தேவை நம் அனைவருக்கும் உண்டு.



பொருளடக்கம்

தனி மனிதப் பதிப்புகள்

ஆறுமுக நாவலர் (1822-1879) - பொ. வேல்சாமி

சி.வை. தாமோதரம் பிள்ளை (1832-1901) - ஜ. சிவகுமார்

தான் கலந்த தமிழ் : உ.வே.சா. பதிப்பித்ததிலிருந்தும் பதிப்பிக்காமல் விட்டதிலிருந்தும் சில குறிப்புகள் - அ. சதீஷ்

வட்டார இலக்கியப் பதிப்பு முன்னோடி : தி.அ. முத்துசாமிக் கோனார் - பெருமாள்முருகன்

தமிழ்ப் பதிப்பு வரலாறு : ரா. இராகவையங்கார் (20.09.1870 - 11.07.1946) - கா. அய்யப்பன்

வ.உ.சி.யின் பதிப்புப்பணி ஆ. சிவசுப்பிரமணியன்

வையாபுரிப் பிள்ளையின் சங்க இலக்கியப் பதிப்பும் திருமுருகாற்றுப்படை பதிப்புகளும் - பு. ஜார்ஜ்

மேட்டுப்பாளையம் வீராசாமிப் பிள்ளை வேணுகோபாலப் பிள்ளை [1896-1985] - கோ. கணேஷ்

தமிழறிஞர் மு. அருணாசலம் அவர்களின் பதிப்புப்பணி : சிறு குறிப்பு - உல. பாலசுப்பிரமணியம்

உரை மரபிலிருந்து பதிப்பு மரபை நோக்கி...தி.வே. கோபாலையரின் பதிப்புகளில் வெளிப்படும் புலமைத் தன்மைகள் குறித்த உரையாடல் - பா. இளமாறன்

பொதுக் கட்டுரைகள்

பழைமைக்கும் புதுமைக்கும் பாலமாகும் புதுச்சேரி - புதுவை ஞானகுமாரன்

ஈழத்தமிழ்ப் பதிப்புலகம் : பிரச்சனைகளும் செல்நெறியும் - ந. இரவீந்திரன்

சிங்கப்பூர் பதிப்புத்துறை - எம்.எஸ். ஸ்ரீலக்ஷ்மி

மலேசியத் தமிழ்க் கட்டுரை இலக்கியம் - ரெ. கார்த்திகேசு

தமிழ் நூற்பதிப்பும், ஆய்வு முறைகளும் - கார்த்திகேசு சிவத்தம்பி

சென்னைக் கல்விச்சங்கம் வெளியீடுகள் - தாமஸ் ஆர். டிரவுட்மேன் தமிழில்: அபிபா

ஐரோப்பிய மொழிகளில் தமிழ் இலக்கண நூல்கள் (1550-1950)ஆர்.இ. ஆஷெர் தமிழில்: ஆர். பெரியசாமி

தமிழ் முஸ்லிம்களின் அச்சுக் கலாசாரம் (1835-1947) - J.P.B. மோரே

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் அச்சுப் பண்பாடும் புத்தக உருவாக்கமும் - பேரா. வீ. அரசு

19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியப் பதிப்புகளின் போக்குகள் - வெ. ராஜேஷ்

இசை நூல் பதிப்புகள் - அரிமளம் பத்மநாபன்

நிகழ்த்துக்கலைப் பதிப்புகள் கும்மி அச்சுப் பிரதிகள் - அ. கோகிலா

நாட்டார் வழக்காற்றுத் தொகுப்புகள் - பதிப்பு வரலாறு பற்றிய குறிப்புகள் - முனைவர் ஆ. தனஞ்செயன்

தமிழில் சிறார் இலக்கியம் - சில குறிப்புகள் - வ. கீதா

காற்றில் கலந்த புத்தகங்கள் - டி. தருமராஜன்

நூற்றொகை பதிப்புகள் - து. குமரேசன்

மொழிபெயர்ப்பு பதிப்புகள் - ந. முருகேசபாண்டியன்

கிறித்தவத் தமிழ்ப் படைப்புகள் - அமுதன் அடிகள்

பௌத்தத் தமிழ் நூல் பதிப்புகள் - கே. சந்திரசேகரன்

வைணவப் பதிப்புகள் - முனைவர் சு. வேங்கடராமன் ( தமிழில் : ரபெசா )

கம்பராமாயணப் பதிப்புகள் - நூற்பட்டியல் - அ.அ. மணவாளன்

கையேடுகளின் நிரந்தர ஆட்சி! - தமிழ்மகன்

பொதுவுடைமை இயக்கப் பதிப்புகள் - ஆர். பார்த்தசாரதி

தலித் பிரசுரங்களும், நூல்களும் (1910-1990) - ஸ்டாலின் ராஜாங்கம்

தமிழ் நிகண்டுகளின் பதிப்புத்தடம் - மா. சற்குணம்

கமில் சுவெலபில் பார்வையிலான தமிழ்ப் பெயரடை-வினையடை வரையறைகளும் தமிழிலக்கண தமிழ் அகராதியியல் மரபுகளும் - பெ. மாதையன்

நிறுவனம் சார்ந்த பதிப்புகள்

எளிய அமைப்பு, மலிவு விலை : சாக்கை ராஜம் பதிப்புகள் - இரா. வெங்கடேசன்

பதிப்புத்துறையில் பாண்டித்துரைத் தேவரின் நான்காம் தமிழ்ச்சங்கம் - ஒரு பார்வை - பா. தேவேந்திர பூபதி

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகமும் தமிழ்ச் சுவடிப் பதிப்புகளும் - முனைவர் ப. பெருமாள்

சென்னைப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை - வ. ஜெயதேவன்

அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பு - கல்பனா சேக்கிழார்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீட்டுப் பணிகள் - முனைவர் மு. வளர்மதி


தற்போது விற்பனையில்....



விலை : ரூ 95.00

பக்கங்கள் : 320

வெளியீடு : பாரதி புத்தகாலயம் 421, அண்ணா சாலை, தேனாம்பேட்டை,சென்னை - 18

தொலைபேசி : 91 - 44 - 24332424, 91 - 44 - 24332924

e-mail : thamizhbooks@gmail.com

நன்றி: விருபா

வெள்ளி, 23 அக்டோபர், 2009

இஸ்லாமிய வாழ்வியல் புதினங்கள்-10 ஆண்டு

மணிமாறன்


வாழ்வின் முழுமையைச் சொல்வது நாவல். காவியங்களால் எட்ட முடி யாத மாபெரும் உயரத்தையும் எட்டு கிற நாவலின் கலைவடிவம் தத்துவம். நாவலுக்குள் கலை ரீதியான விவாதம் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. தத்து வமின்றி எந்த விவாதமும் இல்லை. எனவே தத்துவமின்றி நாவலுமில்லை. ஒரு சமூகத்தின் கூட்டு விவாதத்தின் கலை ரீதியான மாபெரும் வெளிப் பாடே நாவல். எல்லாவற்றையும் வர லாற்றின் முன் நிறுத்தி விசாரிக்கும் விஸ்தாரமான வெளிப்பாடு வடிவமாக நாவலே இன்று வரை நீடித்திருக்கிறது.

இவ்வகையில் இஸ்லாமிய மக் களின் கலாச்சார கூறுகளையும், தனித்த பண்பாட்டு அடையாளங்களை யும் தன்னுடைய ``ஒரு கடலோரக் கிரா மத்தின் கதை” யில் இருந்து தொடர்ந்து அக்கறையுடன் பதிவு செய்து வருபவர் தோப்பில் முஹமது மீரான். அவரு டைய இக்காலத்திய 2000 ஆவது ஆண்டுக்குப் பிந்தைய படைப்பு “அஞ்சு வண்ணம் தெரு”.

இஸ்லாமிய மரபுக் கதைகளை அஞ்சு வண்ணம் தெருவின் அழிவின் வழியாக எழுதிப் பார்த்திருக்கிறார் மீரான்.

நபீசா மன்ஸிலின் பெயரை தாருல் ஸாஹினா என்றாக்கிடும் பொழுதிற் கான இடைவெளிகளில் அஞ்சு வண் ணம் தெருவின் வரலாற்றை அழியாத வரலாற்றுக் கதைகளின் ஊடாக கடக் கிறார்.

மம்மதும்மா ஒரு அசாத்தியமான பெண் பாத்திரம், வெள்ளை பரங்கி யரை எதிர்த்து கிலாபத் போராட்டத் தில் மலபாரில் உயிரைத் துச்சம் என நின்று போராடிய அயம்மதாஜியின் வழித் தோன்றல் என்கிற புனைவு அவ ளுடைய மனநிலையை வாசகனுக் குள் கத்தியென இறக்குகிறது.

மீரானே நாவலில் சொல்வது போல இந்த நாவல் வரலாற்றை ஞாபகப்படுத் திடும் செயல். `` வரலாறு ஆபத்துக் கட்டங் களில் கையெட்டிப் பிடிக்க கூடிய நினைவு களாகும் என்பது அவர் களுக்குத் தெரி யாது. பன்னாட்டு ஏகாதிபத்திய ஆதிக் கம் நடக்கும் இன்றைய ஆபத்தான சூழலில் ஏகாதிபத்தியத்திற்கு எதி ராகப் போராடுவதற்கு நமக்கு சில நினைவுகள் தேவைப்படுகின்றன.

பின்பகுதி முழுக்க நிகழ் காலத் தில் இயங்குகிறது. தவ்ஹீதுக்களுக் கும் சுன்னத்துல் ஜமாஅத்காரர் களுக்குமான சண்டை சச்சரவுகளாக நீடிக்கிறது. இஸ்லாமியச் சமூகத்திற் குள் தங்களுடைய வழிபாட்டு முறை குறித்து நிகழ்ந்து கொண்டிருக்கும் உள் முரண்பாடுகளை நாவலின் மையமாக்கி கடக்கிறது.

தொப்பி போடணுமா - போடக் கூடாதா விரல்ஆட்டித் தொழனுமா அல்லது விரல் ஆட்டக் கூடாதா? என்று இன்றைக்கு தமிழகத்து இஸ் லாமியத் தெருக்களில் நிகழ்ந்து கொண்டிருக்கும் தத்துவச் சண் டையை காட்சிப் படுத்தியிருக்கிறார்.

இந்த நாவலை எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய வலைத் தளத்தில் கொண்டாடியிருக்கிறார். அதற்கு வேறு எதுவும் முக்கிய கார ணம் இருப்பதாக எனக்குத் தோன்ற வில்லை. நாவலின் பல இடங்களில் “பெட்ரோல் துட்டு தவ்ஹீது காரங்க கிட்ட விளையாடுகிறது. வெளி நாட்டுப் பணத்துல இங்க கலவரம் பண்ணிக் கிட்டு திரியிறாங்க” என்கிற ஜெயமோகனின் உள் குரலையே மீரானும் எழுதிச் செல்வது தான்.

நாவலை வாசித்து முடித்த நீண்ட நேரத்திற்குப் பிறகும் நம்முடைய மனங்களில் வன்கொலையாகப் பலியிடப்பட்ட தாயம்மாவும், மெஹ் ராஜ் இரவின் கவித்துவ வரிகளை தந்து சென்ற ஆலிப்புலவரும், அகற் றப்பட்ட வேப்பமரமும், மைதீன் பிச்சை மோதீனும், தைக்காப் பள்ளி யும், விஷப்பற்களை நீக்கிய பின் தாயோடு நிற்கும் பாம்பும் நிழலாடிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

400 பக்கங்களுக்கும் குறைவாக எழுதுவது எல்லாம் நாவலே அல்ல. நாவல் என்பது விஸ்தாரமான பரப்பு. வரலாற்றின் முன் ஞாபகங்களை வைத்து விளையாடும் மொழி விளை யாட்டு நாவல் என்று எழுத்தாளன் மிரட்டப்பட்டுக் கொண்டிருந்த நாட் களில் எழுதவந்தவர் கீரனூர் ஜாகிர் ராஜா.

அவருடைய மீன்காரத்தெருவும், கருத்த லெப்பையும் அதுவரை தமிழ்ச் சமூகம் அறிந்திராத இஸ்லா மிய கலாச்சாரத்தைப் பதிவு செய் தன. இரட்டை விரல்களுக்குள் மட் டும் அடங்கிவிடக் கூடிய வடிவில் மிக விரிவான தனித்த இஸ்லாமிய பண்பாட்டு கலாச்சாரக் கூறுகளை அவற்றில் அவர் பதிவு செய்திருந் தார். குறிப்பாக தமிழ் கலாச்சார, பண்பாட்டு அடையாளங்களோடு இயைந்து கிடந்தது நாவலுக்குள் விரிந்த வாழ்வு.

ஜாகிரின் மூன்றாவது நாவல் துருக் கித் தொப்பி. வாழ்ந்து கெட்ட குடும்பம் ஒன்றின் கதையின் ஊடாக மனித மனங்களுக்குள் ஊறிக் கிடக்கும் வக் கிரம், காமம், அன்பு, இயலாமை, குற்ற வுணர்ச்சி என யாவும் பதிவாகிறது.

கே.பி.ஜே., அல்லாவுத்தலா, ரகம் மது என தொடரும் ஆண் மனங்களின் வழியாக மர்லின் மன்றோ, காம புத் தகங்கள், அரசியல் வெறி, சீட்டுக் கச் சேரி, பெண்கள் சகவாசம், வெட்கமும் குற்றமும் உணராத காமம் என மனித மனங்களின் சகிக்க முடியாத குரூரம் பதிவாகியுள்ளது.

தான் பிள்ளை பெற்ற நாளில் வந்து தொலைத்த அம்மைநோயால் பிள்ளைக்கு பால் தர முடியாத துய ருக்கு ஆளான நூர்ஜஹான் அதற்கு காரணமாயிருந்த மூத்த பிள்ளை ரகமதுல்லாவை வாழ்நாள் முழுக்க திட்டியபடியே இருக்கிறாள். தன் துய ரைத் தீர்க்க ஏழுவயது வரை தன்னு டைய இரண்டாவது மகன் இக்பாலுக்கு பால் புகட்டிக் கொண்டேயிருக்கிறாள்.

நாவல் சமகால அரசியல் வரலாற் றின் வழியே தான் நகர்த்தப்படுகிறது. தமிழ் இஸ்லாம் எனும் கலாச்சார வெளியைத் தான் நாவல் முழுக்க காட் சிப்படுத்தியிருக்கிறார் ஜாகிர்.

நாவலில் ஈஷா நபி தான் இயேசு என்கிற விளக்கமும், கிறிஸ்தும் இறைத் தூதரே என நிறுவியிருப்பதும் அந்த சர்ச் வாசலில் ரகமதுல்லா இயேசுவுடன் உரையாடுவதும் காவியக் காட்சிகள். தன் வயதில் ஏற்படக்கூடாத வலியை அம்மாவின் கற்பு குறித்த குழப்பத்தை அப்பாவுக்கு கடிதமாக எழுதி கடிதத் தோடு அம்மாவிடம் மாட்டிக் கொள் ளும் ரகமதுல்லா ஒரு விசித்திரமான பாத்திரப்படைப்பு.

எல்லா மாபெரும் இலக்கியங் களும் கச்சிதமாக முடிவதில்லை. எதையோ வாசகனுக்குச் சொல்லி, சொல்லாமல் விட்டவற்றை தேடியலை வாயாக என கதவைத் தான் திறந்து விட்டிருக்கின்றன.

அப்படித்தான் துருக்கித் தொப்பி யின் முடிவும் அமைந்திருக்கிறது. நாவ லைப் படித்து முடித்த பிறகும் வயதை யும் மீறி ரோட்டில் கிடந்த கல்லைத் தூக்கி எறிந்தேன். அதுயார் மேல் விழுந் ததோ தெரியவில்லை. கல்லடிப்பட்ட வர் கே.பி.ஜேவாகக் கூட இருக்கலாம்.

மற்றொரு மிக முக்கியமான இஸ் லாமிய கலாச்சார வாழ்வை பதிவு செய்த மிக முக்கிய ஆவணம் சல்மா வின் `` இரண்டாம் ஜாமங்களின் கதை யாகும்”. மிகுந்த சவாலான களத்திற் குள் நாவல் பயணிக்கிறது. இரண்டாம் ஜாமத்தின் பெண் உடலுக்குள் இயங் கும் பெரு மூச்சும், கண்ணீரும், பரவச மும், வேதனையும், வலியும் நாவலின் வரிகளுக்குள் கேட்டபடி இருக்கிறது. சமீபத்தில் ஆங்கில, மலையாள மொழி பெயர்ப்பு கண்டிருக்கிறது இரண்டாம் ஜாமங்களின் கதை.

92 டிசம்பருக்கும், செப்டம்பர் 11க்கும் பிறகான இஸ்லாமிய தெருக்களின் மன நிலையையும் ரயில்வே ஸ்டேஷன் களில் தன் மதம் சார் அடையாளத்தால் கருப்பு அங்கி நீக்கி பார்க்கப்படும் பெண்களின் துயரையும், வலியையும் இனிமேல் தான் எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. வன்முறையையும் இஸ்லாத்தையும் ஒரே கோட்டில் இணைத்துப் பார்க்கிற மனங்களை ஊடறுக்கும் இலக்கியப் பதிவு எப் போது உருவாகுமோ தெரியவில்லை.

நன்றி:தீக்கதிர்

புதன், 21 அக்டோபர், 2009

மணல் வீடு- நாடகத் தொகுப்பு


மணல்வீடு, பசுமை என்னும் தாய்மை, முளைப்பாரி என்ற மூன்று நாடகங்களின் தொகுப்பு நூல் இது. ஆசிரியரின் முதலாவது நாடகத் தொகுப்பாகும். இத்தொகுப்பில் உள்ள நாடகங்கள் சுற்றுச் சூழலைப் பற்றியும், மக்கள் ஒற்றுமை, மனித நேயம் ஆகியவற்றைப் பற்றி பேசுகின்றன


எழுத்தாளர் / தொகுப்பாளர் : சுப்ரபாரதிமணியன்

பதிப்பு : முதற் பதிப்பு (2005)
விலை : 30 .00/உரூபா
பிரிவு : நாடகங்கள்
பக்கங்கள் : 80


பதிப்பகம் : கௌதமராஜன் வெளியீடு
                        "புதுயுகம்" நடராஜன்
முகவரி : 24, பாட்டை வீதி

மீனாட்சிப்பேட்டை
குறிஞ்சிப்பாடி 607302
கடலூர்.

மாவோ


அடக்குமுறையும் மிருகத்தனமும் தீராத அடிமைத்தனமும் நிறைந்தது சீனர்களின் வரலாறு. கிட்டத்தட்ட நான்காயிரம் ஆண்டு கால மன்னர் ஆட்சி. தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் என்று மாறி மாறி சீனாவைத் துண்டாடிக் கொண்டிருந்த காலகட்டம் அது. சீனாவின் வரலாறை மாற்றியமைக்கும் உத்வேகத்துடன் தன் போர் முரசைக் கொட்டினார் மாவோ. என் பின்னால் வா என்று சீனாவைப் பார்த்து கம்பீரத்துடன் அழைப்பு விடுக்கும் தீரமும் துணிச்சலும் மாவோவிடம் இருந்தது. தேசமும் அவர் பின்னால் அணி திரண்டது. ஏகாதிபத்தியத்துக்கு எதிரான, நிலப்பிரபுக்களுக்கு எதிரான, அடக்குமுறைக்கு எதிரான மாபெரும் போராட்டம் மாவோவின் வழிகாட்டுதலுடன் தொடங்கியது. உழைக்கும் மக்களின் ஆட்சி முதன் முறையாக அங்கே மலர்ந்தது. சீன சரித்திரத்தில் எந்தவொரு தனி மனிதனும், எந்தவொரு கட்சியும், எந்தவொரு குழுவும் இதுவரை இத்தகைய சாதனையை நிகழ்த்தியது கிடையாது.


மிக தெளிவான அரசியல் கொள்கை. தீர்க்கமான போர் தந்திரம். அசரவைக்கும் மக்கள் பலம். இந்த மூன்று ஆயுதங்களைப் பயன்படுத்தி மாவோ நிகழ்த்திக் காட்டியப் புரட்சி, சீனாவை முதன்முறையாக ஒரு புதிய திசையில் செலுத்தியது. சீன வரலாற்றில் மட்டுமல்ல உழைக்கும் மக்களின் வரலாற்றிலும் மாவோ ஒரு வீர சகாப்தம்.

சீன புரட்சியை கண்முன் நிருத்தும் இந்நூல் உலக சரித்திரத்தில் மாவோவின் இடத்தை திட்டவட்டமாக சுட்டிக்காட்டவும் செய்கிறது.

ஆசிரியர்-மருதன்
வெளியீடு,
கிழக்கு பதிப்பகம்.
பக்கம்:216   விலை:100.00/உரூபா

உமர்: செங்கோல் இல்லாமல் கிரீடம்


ஆட்சியாளன் ஒருவன், செங்கோலின் வலிமையையும் கிரீடத்தின் கம்பீரத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு, மக்கள் மீதான அன்பு, இறையச்சம், நேர்மை ஆகியவற்றை மட்டுமே தன் அதிகாரங்களாகக் கொண்டு ஆட்சி நடத்தமுடியுமா? முடியும் என்று நிரூபித்தவர் இரண்டாவது கலீஃபாவான உமர். முகமது நபியின் கடுமையான எதிரியாக, அவரைக் கொலை செய்யும் வெறியுடன் அலைந்துகொண்டிருந்தவர், முகமதுவை நேரடியாகக் காணும்போது மனம் மாறி, அவருடன் சேர்கிறார். பின் நபியின் அத்தனை போர்களிலும் பங்கேற்கிறார். அவரது மறைவுக்குப் பின், முதலாம் கலீஃபா அபுபக்கரின் பக்கபலமாக இருக்கிறார்.


ஆட்சி உமரிடம் ஒப்படைக்கப்படும்போது, அவர் களிப்படையவில்லை. கிழிந்த, ஒட்டுப்போட்ட ஆடைகளையே அணிகிறார். மக்கள் குறையைத் தீர்ப்பதிலேயே காலத்தைக் கழிக்கிறார். கஜானாவிலிருந்து தன்னிஷ்டத்துக்குப் பணம் எடுத்துக்கொள்வதில்லை. கலீஃபாவாக, சுல்தானாக அவர் ஆண்ட ராஜ்ஜியம் விரிந்து பரந்திருந்தது. உயிர் பிரியும் நேரத்தில் அவரிடம் இருந்தது கடன்கள் மட்டுமே. தொழுகை நேரத்தில் எதிரி ஒருவனால் கத்தியால் குத்தப்பட்டு உயிர்விடும் உமர் தன் கொலையாளிக்குக் கருணை கேட்கிறார். வரலாற்றுச் சம்பவத்தின் அடிப்படையில் மலையாளத்தில் நூறநாடு ஹனீஃபால் எழுதப்பட்ட இந்தப் புதினத்தை நிர்மால்யா தமிழில் மொழிபெயர்த்துள்ளார். புதினம் என்பதற்கு மேலாக, விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்ட வரலாறாகவே இதனைக் கொள்ளலாம்.
நன்றி: சாய்

கிழக்கு பதிப்பகம் வெளியீடு,
விலை= 175-00/உருபா

செவ்வாய், 20 அக்டோபர், 2009

அயர்லாந்து 800 ஆண்டுகால புரட்சி..



என். ராமகிருஷ்ணனின் அயர்லாந்து அரசியல் வரலாறு சமீபத்தில் கிழக்கில் வெளிவந்துள்ளது. தமிழில் அயர்லாந்து பற்றி விரிவாக யாரும் எழுதியதாகத் தெரியவில்லை. எஸ்.வி. ராஜதுரை ஒரு புத்தகம் எழுதியிக்கிறார். 


ரஷ்யப் புரட்சியைப் போலவே அயர்லாந்து போராட்டமும் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காந்தியின் அறவழிப் போராட்டம் வேண்டாம், ஐரிஷ் மக்களைப் போல் நாமும் போராடுவோம் என்று அழைப்பு விடுத்தார் சுபாஷ் சந்திர போஸ்.

இந்தியாவைப் போலவே அயர்லாந்தும் பிரிட்டனின் காலனி நாடுதான். முதல் உலகப் போரை (1914-1918) ஐரிஷ் மக்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். பிரிட்டனுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முடுக்கிவிட்டார்கள். இங்கே இந்தியாவில் காந்தி, நேர் எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். போரில் ஈடுபட்டிருக்கும்போது பிரிட்டனை எதிர்ப்பது சரியல்ல அவர்களுக்கு உதவவேண்டிய சமயம் இது என்றார்.


புத்தகத்தின் பின் அட்டை வாசகங்கள் கீழே.


அப்போதைய இங்கிலாந்தின் படைபலத்தோடு ஒப்பிட்டால் அயர்லாந்து சுண்டைக்காயைவிடச் சிறியது. மிதிக்கக்கூட வேண்டாம், தடவினாலே தடமின்றி போகும் அளவுக்குப் பூஞ்சையான தேசம் அது. அயர்லாந்து மக்கள் ஆட்டு மந்தைகள். அவர்களை அடக்கி அடிமைப்படுத்துவதில் தவறேதுமில்லை. இப்படித்தான் நினைத்தது இங்கிலாந்து. எதிர்பார்த்தபடியே சிறு எதிர்ப்பும் இன்றி அடங்கி சுருண்டுபோனது அயர்லாந்து.

தங்கள் மொழி, இனம், கலாசாரம், அடையாளம் அனைத்தும் சிறிது சிறிதாக அழிக்கப்படுவதைக் கண்ணால் கண்டு துடிதுடித்து நின்றனர் ஐரிஷ் மக்கள். வழிகாட்ட தலைவர் இல்லை. எதிர்த்து நின்று போராடுவதற்குப் படைபலம் இல்லை. ஒன்றுபடுத்தவும் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் வலிமையான அரசியல் சித்தாந்தம் எதுவும் இல்லை. தேசம் காக்கப்படவேண்டும். இழந்த உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். மீட்பர் ஒருவர் வருவார், நிலைமை தாமாகவே மாறும் என்று கன்னத்தில் கைவைத்துக் கிடப்பதால் பலன் ஏதும் இல்லை. சிறு துரும்பையாவது கிள்ளிப்போடலாமே!

இப்படித்தான் தொடங்கியது அந்த வீரம்செறிந்த போராட்டம். சுமார் 800 ஆண்டு கால இடைவிடாத போராட்டத்தின் இறுதியில் அயர்லாந்து சுதந்தரம் அடைந்தது. உரிமைகளுக்காகக் கொடிபிடிக்கும் உழைக்கும் மக்களின் உந்துசக்தியாகத் திகழும் மகத்தான போராட்ட வரலாறு அது.

அல்ஜீரியா



அல்ஜீரியப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், அது பற்றி எழுதியும் பேசியும் வந்த இரு பெரும் ஃபிரெஞ்சு எழுத்தாளர்கள், அல்பேர்ட் காம்யு மற்றும் ழான் பால் சார்த்தர்.


முதலில், அல்பேர்ட் காம்யு (Albert Camus). இவர் அல்ஜீரியாவில் பிறந்தவர். தத்துவம், அரசியல், இலக்கியம் ஆகிய துறைகளில் ஆர்வம் செலுத்தியவர். இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர். அல்ஜீரிய மக்களின் விடுதலை வேட்கையை மிகச் சாதுரியமாக ஒதுக்கித்தள்ளுகிறார் காம்யு. ஃபிரெஞ்சு காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடும் எஃப்.எல்.என். இயக்கத்தை அறிவுஜீவிகள் யாரும் ஆதரிக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறார். அவ்வாறு செய்வது ஆபத்தானது என்று சுட்டிக்காட்டுகிறார்.

காம்யு முன்வைக்கும் தீர்வு இதுவே. ஃபிரெஞ்சு மக்களோடு அல்ஜீரிய முஸ்லீம்கள் கைகோர்த்துக்கொள்ளவேண்டும். அவர்களுடன் ஒத்துப்போகவேண்டும். அதைவிட்டுவிட்டு கொடிபிடித்து போராடுவதும் கோஷம் போடுவதும் பயன் தராது. அல்ஜீரியா விடுதலைப் பெறவேண்டும் என்னும் கோஷம் உணர்ச்சிமயமானது. யதார்த்தமானது அல்ல. ஃபிரெஞ்சு ராணுவத்தின் சித்திரவதைகளை சிறிது காலம் கண்டித்துப்பேசிய காம்யு தன் இறுதி காலத்தில் அதையும்கூட நிறுத்திக்கொண்டார்.

ழான் பால் சார்த்தர் (Jean-Paul Sartre) 1929 முதல் 1931 வரை ஃபிரெஞ்சு ராணுவத்தில் கட்டாயப் பணியாற்றியவர். அரசியல் போக்குகளை உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்த சார்த்தர், அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தால் ஈர்க்கப்படுகிறார். போராட்டத்தின் நியாயத்தைப் புரிந்துகொண்டு வெளிப்படையாக ஆதரிக்கவும் செய்கிறார். எரிச்சலைடந்த ஃபிரெஞ்சுக்காரர்கள் சிலர் அவர் வீட்டு வாசலில் வெடிகுண்டு வைக்கிறார்கள். சார்த்தரின் சீற்றம் அதிகரிக்கிறது. ஒடுக்குமுறையை கையாளும் ஐரோப்பியரைக் கொன்றால் தவறே இல்லை என்று ஒரு புத்தகத்தின் முன்னுரையில் எழுதினார். தன் இறுதி காலம் வரை பல்வேறு அரசியல் போராட்டங்களில் தன்னை இணைத்துக்கொண்டார். இவருக்கும் இலக்கியத்துக்கான நோபல் அறிவிக்கப்பட்டது. சார்த்தர் மறுத்துவிட்டார்.

ஒரே காலகட்டம். ஒரே போர். காம்யு பிரான்ஸை ஆதரித்திருக்கிறார். சார்த்தர், அல்ஜீரியாவை. காலனியாதிக்கத்தைக் கொண்டாடும், நியாயப்படுத்தும் வழக்கம் பல முக்கிய எழுத்தாளர்களுக்கு இருந்திருக்கிறது. Evelyn Waugh எழுதிய Waugh in Abyssinia சட்டென்று நினைவுக்கு வருகிறது. இத்தாலியர்களின் ஆக்கிரமிப்பு அபிசீனியாவுக்குத் தேவை என்று காலனியாதிக்கத்தை வரவேற்று எழுதியிருப்பார் ஆசிரியர். இந்தப் புத்தகம் பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்

1) The Torture of Algiers, Adam Shatz

2) My Encounter with Sartre by Edward Said
thanks for maruthan

ஞாயிறு, 18 அக்டோபர், 2009

கெரில்லாக்கள் எப்படி உருவாகிறார்கள்?


ஒரு கெரில்லா இயக்கத்தை ஆரம்பிப்பது சிரமமானது. அதைவிட சிரமமானது இயக்கத்தை தொடர்ந்து நடத்துவது. தொடர்ந்து நடத்துவதைக் காட்டிலும் சிரமம் தரக்கூடியது புரட்சி நடத்தி வெற்றி பெறுவது. வெற்றி பெறுவதைக் காட்டிலும் சிரமமானது எது தெரியுமா? வெற்றிக்குப் பிறகும் புரட்சியைத் தொடர்வது.

The Battle of Algiers என்னும் ஃபிரெஞ்சுத் திரைப்படத்தில், FLN (National Liberation Front) இயக்கத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் சக போராளியிடம் கூறும் வாசகம் இது. இன்று காலை, யுடிவி தொலைக்காட்சியில் இந்தப் படம் ஒளிபரப்பப்பட்டது. ஆக்கிரமிப்பு அரசாங்கத்துக்கும் (பிரான்ஸ்) கெரில்லா போராளிகளுக்கும் (FLN) இடையில் நடைபெறும் யுத்தங்களின் தொகுப்பே இப்படம். நவம்பர் 1954ல் ஆரம்பித்து டிசம்பர் 1960 வரை அல்ஜீர்ஸில் (அல்ஜீரியாவின் தலைநகரம்) நடைபெற்ற போராட்டங்களை கண்முன் நிறுத்துகிறது இந்தப் படம்.

1830ல் ஃபிரெஞ்சுப் படை அல்ஜீர்ஸை நெருங்கியது. நகரம் சூறையாடப்பட்டது. பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானார்கள். மசூதிகள் தரைமட்டமாக்கப்பட்டன. ஃபிரெஞ்சுக் கொடியை பறக்கவிட்டு வெற்றி வெற்றி என்று ராணுவத்தினர் கொண்டாட ஆரம்பிப்பதற்குள், பாரீஸில் பத்தாம் சார்லஸ் மன்னர் தூக்கியெறியப்பட்டிருந்தார். அவர் உறவினர் லூயி ஃபிலிப் ஆட்சியில் அமர்த்தப்பட்டார். ராணுவத்தினருக்குக் குழப்பம். இப்போதுதான் அல்ஜீரியாவை சுற்றிவளைத்திருக்கிறோம். இந்த நேரம் பார்த்தா ஆட்சி மாறவேண்டும்? பாரீஸில் பெரிய அளவில் விவாதம் கிளம்பியது. அல்ஜீரியாவை என்ன செய்வது? ஆக்கிரமிக்க வேண்டாம் விலகிவிடலாம் என்றே பலரும் அபிப்பிராயப்பட்டனர். எதற்கு வம்பு? ஆக்கிரமிப்பைத் தொடங்கிய முந்தைய மன்னரை மக்கள் தூக்கியடித்துவிட்டனர். அதே முடிவை நாமும் எடுத்தால் ஆபத்து அல்லவா?

எதிர்பாராத வகையில் புதிய மன்னர் அல்ஜீரிய ஆக்கிரமிப்பைத் தொடரலாம் என்றே முடிவு செய்தார். இப்போதுதான் நுழைந்திருக்கிறோம், உடனே விலகினால் நமக்குத்தான் சேதம் அதிகம் என்று வியாக்கியானம் கொடுத்தார் மன்னர். ராணுவத்தைத் திரும்பப்பெற்றுக்கொண்டால் நாளை ஊர், உலகம் என்ன சொல்லும்? சுண்டைக்காய் அல்ஜீரியாவிடம் பயந்து பின்வாங்கிவிட்டோம் என்று ஏளனம் செய்யாதா? மாமன்னர் நெப்போலியன் ஆண்ட மாபெரும் ஃபிரெஞ்சு சாம்ராஜ்ஜியத்துக்கு அவமானத்தைப் பெற்றுத்தரலாமா? ஆகவே, எனதருமை மக்களே, இந்த ஆக்கிரமிப்புக்கு உங்கள் ஒத்துழைப்பைத் தாருங்கள். 1834ல் பிரான்ஸ் அல்ஜீரியாவை முறைப்படி (என்றால் முறையற்ற முறையில்) தனது காலனியாக இணைத்துக்கொண்டது. அப்போது அல்ஜீரியாவில் இருந்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3 மில்லியன்.

இந்தப் பின்னணியில் விடுதலைக்கான வேட்கையை மக்களிடையே தூண்டிவிடும் காரியத்தில் இயங்குகிறது எஃப்.எல்.என். இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடத்திவைப்பதில் ஆரம்பித்து மக்களுக்குப் பாதுகாப்பு தருவதுவரை பல்வேறு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள். மாட்டிக்கொண்டால் கில்லடினுக்குத் தலையைக் கொடுத்துவிடவேண்டும் என்பதால் பதுங்கிப் பதுங்கிதான் இயங்கிக்கொண்டிருக்கிறது இக்குழு.

தகுந்த இளைஞர்கள் தேடிப்பிடிக்கப்படுகிறார்கள். சிறுவர்கள் உளவு கண்டறிந்து சொல்கிறார்கள். வெள்ளை முக்காடு அணிந்த பெண்கள் ஆயுதங்கள் கடத்துகிறார்கள். தாக்குதல்கள் ஆரம்பிக்கின்றன. யாரைக் கொல்லவேண்டும் என்பதை தலைமை முடிவு செய்யும். தனியாக அகப்படும் ஃபிரெஞ்சு ராணுவ வீரர்கள் முதலில் பலியாகிறார்கள். நகரம் முழுவதும் படுகொலைகள் ஆரம்பமாகின்றன.

ஃபிரெஞ்சு ராணுவம் நகரத்தை சுற்றி வளையம் ஒன்றை ஏற்படுத்துகிறது. ராணுவத்தினர் குவிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு தெருமுனையிலும் பாதுகாப்பு அரண். பரிசோதனை இல்லாமல் ஒருவரும் தெருவைக் கடக்கமுடியாது. கெரில்லா குழு புதிய வியூகம் ஒன்றை அமைக்கிறது. கொல்லும் வேலை ஒருவருக்கு அளிக்கப்படும். பாதுகாப்பு வளையத்துக்கு வெளியே துப்பாக்கியை மறைத்துவைக்கும் பணி இன்னொருவருக்கு. பரிசோதனை முடிந்து வெளியே வரும் நபருக்கு துப்பாக்கியைக் கொண்டுபோய் சேர்க்கும் வேலை மூன்றாவது நபருக்கு. கொல்லப்படும் ஃபிரெஞ்சு வீரரிடம் இருந்து ஆயுதம் பறிமுதல் செய்யப்படுகிறது.

அடுத்த கட்டம், வெடிகுண்டு தாக்குதல். குண்டுகள் வைக்கும் பணி பெண்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. நீளமான தலைமுடியைக் கத்தரித்துக்கொண்டு, உதட்டுச்சாயம் பூசிக்கொண்டு, பிரெஞ்சுப் பெண்களைப் போல் குட்டைப் பாவாடை, மேல் சட்டை அணிந்துகொண்டு தோள்பையுடன் கிளம்புகிறார்கள் பெண்கள். பையில் குண்டு. ஒருவர் விமான நிலையத்தில் பையைக் கொண்டுபோய் வைக்கிறார். இன்னொருவர், மதுபான விடுதியில். மூன்றாமவர், சந்தையில். மூன்றும் அடுத்தடுத்து வெடிக்கின்றன. பிரெஞ்சு மக்கள் அதிக அளவில் கொல்லப்படுகிறார்கள்.

கெரில்லாக்கள் எதிர்பார்த்தபடியே அல்ஜீர்ஸீல் வசிக்கும் ஃபிரெஞ்சு மக்கள் கொந்தளிக்க ஆரம்பிக்கிறார்கள். உங்களை நம்பித்தானே இங்கே குடிபெயர்ந்தோம். எங்கள் உயிருக்கு உங்களால் உத்தரவாதம் அளிக்கமுடியாதபோது நாங்கள் ஏன் இங்கே இருக்கவேண்டும்? பாரீஸிலும் மக்கள் கேள்விகேட்க ஆரம்பிக்கிறார்கள். பிரெஞ்சு அரசாங்கத்துக்கு அதிருப்தி. கூடுதலாக, எரிச்சல். ஒரு காலனியை கட்டிக்காப்பது லேசான செயல் அல்ல என்பதை அவர்கள் உணர்கிறார்கள். ஆனாலும், பிடிவாதமாக கூடுதல் துருப்புகளை அனுப்புகிறார்கள். தீவிரவாதிகளை உடனே நசுக்குங்கள். விடுதலைப் போராட்டத்தை முடக்குங்கள்.

மூர்க்கத்துடன் எஃப்.எல்.என் தலைமையைத் தேட ஆரம்பிக்கிறது ஃபிரெஞ்சுப் படை. குத்துமதிப்பாகப் பலரை பிடித்துச்சென்று சித்திரவதை செய்ய ஆரம்பிக்கிறார்கள். சொல்லு, எங்கே உன் தலைவர்? உங்கள் நபர்கள் எங்கே மறைந்திருக்கிறார்கள்? மின்சாரம் பாய்ச்சுகிறார்கள். தலைகீழாக நிற்கவைத்து அடிக்கிறார்கள். உடலில் துளை போடுகிறார்கள்.

இரு தரப்பினருக்கும் வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வருகின்றன. மறைவிடத்தை மாற்றிக்கொண்டே இருக்கிறது தலைமை. நான்கைந்து பேரே இறுதியில் எஞ்சுகிறார்கள். என்னை விடுங்கள் நான் சென்று தாக்குகிறேன் என்று ஒரு போராளி கண்கள் சிவக்க சொல்லும்போது, மூத்தவர் அவரைச் சாந்தப்படுத்துகிறார். நாமும் உயிருடன் இல்லாவிட்டால் இயக்கம் அழிந்துவிடும். தலைவர்கள் என்பதற்காக அல்ல, இயக்கத்துக்காகவது நாம் நம்மைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவேண்டும்.

கடுமையான அடக்குமுறையால் 1860ல் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் கொல்லப்படுகிறார்கள். இயக்கம் செத்துப்போகிறது. அப்பாடா கெரில்லாக்கள் ஒழிந்தார்கள் என்று நிம்மதியடைகிறது ராணுவம். இரண்டு ஆண்டுகள் அல்ஜீரியாவில் சிறு சலனமும் இல்லை. 1962ல் மீண்டும் கலகம் தொடங்குகிறது. திகைத்து நின்றது பிரான்ஸ். முதல் கல்லை வீசியவர்கள் யார் என்று தெரியவில்லை. பெண்கள் தெருவில் இறங்கி கூச்சல்போட்டது எப்படி என்று தெரியவில்லை. சுதந்தரம் வேண்டும், ஃபிரெஞ்சுப் படையே வெளியே போ என்ற சிறுவர்களும் சிறுமிகளும் எப்படி கோஷமிட்டார்கள் என்று தெரியவில்லை. சட்டையை, கந்தல் துணியை, பர்தாவை கிழித்து, தேசியக்கொடிகளை உருவாக்கிக்கொண்டார்கள். முன்வரிசையில் இருந்தவர்கள் செத்து விழும்போது, அடுத்து வரிசை மக்கள் கொடியை ஏந்தியபடி முன்னால் வந்து நின்றார்கள். டாங்கிகளை உருட்டிக்கொண்டு வந்தது ராணுவம். விமானங்களை தலைக்கு மேலே பறக்கவிட்டு பயமுறுத்தியது. கண்டவுடன் சுட உத்தரவு போட்டது. முடியவில்லை. இனி தாங்காது என்னும் நிலையில் ஜூலை 5, 1962ல் ஃபிரான்ஸ் அல்ஜீரியாவைவிட்டு ஓடிப்போனது.

கறுப்பு வெள்ளையில் ஓடும் இந்தப் படம் 1966ல் வெளிவந்தது. திரைக்கதைக்காகவும் யதார்த்தமான பாத்திரப் படைப்புக்காகவும், காட்சியமைப்புகளோடு கலந்து நிற்கும் இசைக்காகவும் இன்றுவரையில் பெரிதும் சிலாகிக்கப்படுகிறது இப்படம். மேம்போக்காகப் பார்த்தால் இது கெரில்லா போராளிகளுக்கு ஆதரவான படம் போல் தோன்றலாம். உண்மை அதுவல்ல. சாகஸக்காரர்களாகவோ கதாநாயகர்களாகவோ எஃப்.எல்.என் இயக்கத்தினர் காண்பிக்கப்படவில்லை. அதே போல், ஃபிரெஞ்சு ராணுவத்தினரையும் வில்லன்களாக உருமாற்றவில்லை இப்படம். அல்ஜீர்ஸ் மக்களுக்கு எதிரான தாக்குதல்களையும் சித்திரவதைகளையும் ஏற்றுநடத்தும் ஃபிரெஞ்சு உயர் கமாண்டர் சாந்தமான முகபாவத்துடன் காட்சியளிக்கிறார்.

தீவிரவாதிகளைக் கொல்கிறோம் என்னும் பெயரில் அப்பாவி மக்களைக் கொல்வது, சித்திரவதை செய்வது தவறில்லையா என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது அந்த அதிகாரி அமைதியான குரலில் அளிக்கும் பதில் இது. போரில், சரி தவறு என்று எதுவும் இல்லை. சித்திரவதை செய்வதை நம் சட்டம் அனுமதிப்பதில்லை என்பதை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம். நாங்கள் செய்வது விசாரணைதான். அதில் சிலர் இறக்க நேரிடலாம். ஒன்றும் செய்வதற்கில்லை. உங்களுக்கு வெற்றி வேண்டுமானால் எங்களை நச்சரிக்காமல் இருங்கள். வழிமுறைகள் பற்றி கவலைப்படவேண்டாம்.

கெரில்லாக்களின் நீதியும் இதுவேதான். ஆக்கிரமிப்பாளர்கள் ஆயுதம் ஏந்துவதால்தான் நாங்களும் ஆயுதம் ஏந்துகிறோம். அவர்கள் எங்களை மட்டும் கொல்வதில்லை. எங்கள் மக்களையும் சேர்த்தே கொல்கிறார்கள். நாங்கள் எங்கள் எதிரிகளை மட்டும் கொல்வதில்லை. எதிரி தேசத்து மக்களையும் சேர்த்தேதான் கொல்கிறோம். எங்கள் போராட்ட முறையை எங்கள் எதிரிகளே தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஆக்கிரமிப்பாளர்கள் மறைவதில்லை. ஆகவே, கெரில்லாக்களும்
நன்றி: மருதம்

சனி, 17 அக்டோபர், 2009

எரியும் பனிக்காடு: தேயிலைத் தோட்டங்களின் கதை



முதல் உலகப் போர் நடைபெற்றது கருப்பன், வள்ளி இருவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தியா பிரிட்டனின் காலனி தேசமாக இருப்பது தெரியாது. இந்திய தேசிய காங்கிரஸ் தெரியாது. வங்கப் பிரிவினை தெரியாது. காந்தி தெரியாது. தென் ஆப்பிரிக்கப் போராட்டம் தெரியாது. சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம், ரவுலட் சட்டம், ஜாலியன்வாலாபாக், சைமன் கமிஷன், பகத் சிங், தண்டி யாத்திரை எதுவும் தெரியாது. அவர்கள் வசிக்கும் மயிலோடை கிராமம் தெரியும். மற்றபடி, திருநெல்வேலியைக்கூட முழுவதுமாக அவர்கள் அறிந்துவைத்திருக்கவில்லை.

நாங்கள் ஏழைகள். தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள். விலங்குகளுக்குச் சமமாகவோ அல்லது விலங்குகளை காட்டிலும் கீழானவர்களாகவோ சமூகத்தால் மதிக்கப்படுகிறோம். எங்களுக்குப் பட்டினி பழக்கமாகிவிட்டது. அவமரியாதை பழக்கமாகிவிட்டது. ஏ நாயே என்று அழைத்தால் உடலை குறுக்கிக்கொண்டு, சொல்லுங்க சாமி என்று ஓடிவர பழகிவிட்டது. தேங்காய் மூடியில் தேநீர் குடிக்கிறோம். வாரம் ஒரு முறையாவது பொங்கிச் சாப்பிட வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வோம்.

பஞ்சம் பிழைக்க வழி தெரியாமல் கருப்பன் அவதிப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் ஓர் அழைப்பு வருகிறது. மலைக்கு வா, அங்குள்ள வெள்ளைக்கார துரைகள் நல்லவர்கள். கைநிறையச் சம்பாதிக்கலாம். இலவச மருத்துவ சேவை கிடைக்கும். தவிரவும், மரியாதையுடன் நடத்துவார்கள். தனியே வருவதா என்று யோசிக்காதே, உன் மனைவியையும் அழைத்துவா. போய் வரும் செலவு என்னுடையது. இந்தா பிடி, இது உன் செலவுக்கு. நீ மட்டுமல்ல, உன் போன்ற பலரும் இந்தக் கிராமத்தில் இருந்து வரவிருக்கிறார்கள். தயங்காதே.

கண்கள் நிறைய கனவுகளுடன் வால்பாறை தேயிலை எஸ்டேட்டுக்கு இருவரும் வந்து சேர்கிறார்கள். ஓரிரு தினங்களுக்குள் மயக்கம் தெளிந்துவிடுகிறது. வேலை ஆரம்பமாகிறது. கருப்பனுக்கு விறகு வெட்டும் பணி. வள்ளி தேயிலை கிள்ளவேண்டும். தீப்பெட்டி அளவே உள்ள தகர வீடு. அதையும்கூட இன்னொரு குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ளவேண்டும். ஆளுக்கொரு போர்வை. மழையில் நனைந்துவிட்டால், அடுப்பில் சூடுசெய்து பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மாற்று போர்வை கிடைக்காது. பனி, மழை, குளிர், உடல் வலி எதற்கும் விடுமுறை கிடையாது. அதிகாலை எழுந்து, சாப்பிட்டு கிளம்பிவிடவேண்டும். இருட்டிய பிறகே வீடு திரும்பலாம்.

சம்பளம் எவ்வளவு சாமி என்று கேட்டால் முகத்தில் குத்து விழும். பிச்சைக்கார நாயே, உனக்கெல்லாம் கணக்கு வழக்கு சொல்லிக்கொண்டிருக்கவேண்டுமா? சொன்னாலும் புரியவா போகிறது? அவர்களாகவே ஒரு தொகையை மாதாமாதம் பதிவேட்டில் எழுதிக்கொள்வார்கள். வந்து சேர்ந்த செலவு, முன்பணம், சமையல் சாமான் வாங்க கொடுக்கும் வாராந்திர பணம், கம்பளிக்கான பணம் என்று ஒரு நீண்ட பட்டியலை வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாக கழித்துக்கொண்டே வருவார்கள். ஆண்டு இறுதியில் அழைப்பார்கள். உன்னுடைய மொத்த சம்பாத்தியம் எழுபது ரூபாய். கடன் அறுபது ரூபாய் கழிந்து பத்து ரூபாய் மிச்சமிருக்கிறது. இந்தப் பணத்தைக் கொண்டு ஊருக்குப் போகமுடியாது. இன்னொரு வருஷம் வேலை செய். போ.

பெண்கள் தேயிலைக் கொழுந்துகளைக் கிள்ளிக்கொண்டிருக்கும்போது, வெள்ளைக்கார துரைமார்கள் பெண்களின் கன்னத்தைப் பிடித்து கிள்ளுவார்கள். சரி போகட்டும் என்று பொறுத்துக்கொண்டால், கணக்கில் வரவு கூடும். இலை கிள்ளவேண்டாம். வள்ளியைப் போல் அழுதுபுரண்டு, அலறினால், கூடைக்கூடையாக இலைகள் கிள்ளினாலும் வரவு இருக்காது. அவமானமும் அடிகளும் கிடைக்கும்.

ஓடிப்போகலாம் என்று உள்மனம் படபடக்கும். சாத்தியமில்லை. எஸ்டேட் அதிகாரிகளிடம் இருந்து ஒரு வேளை தப்பினாலும் விலங்குகளிடம் இருந்து தப்பமுடியாது. அப்படியே தப்பினாலும் மலை நெடுக அமைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு அரண்களில் ஏதாவது ஒன்றில் தடுத்துப் பிடித்துவிடுவார்கள். அனைத்தையும் கடந்து நடந்தும் ஓடியும் ஊருக்குப் போய்விட்டாலும், அங்குள்ள காவலர்கள் வீட்டுக்கே வந்து கைது செய்வார்கள். அது ஒரு மாயப்பின்னல்.

கழிப்பறை கிடையாது. மருத்துவ வசதிகள் கிடையாது. பணிபுரிபவர்கள் இறந்துபோனால், தூக்கிக்கடாசிவிட்டு ஊரிலிருந்து மேலும் சிலரை ஆசைக்காட்டி அழைத்துவருவார்கள். மனைவி இறந்தால், கணவன் ஒரு நாள் துக்கத்தில் இருக்கலாம். மறுநாள் எட்டி உதைத்து எழுப்பிவிடுவார்கள். பிரசவத்துக்குச் சில தினங்கள் மட்டுமே விடுமுறை அனுமதி. வலிக்கும் வேலைக்கும் தொடர்பு எதுவுமில்லை. நின்றுகொண்டே கிள்ளமுடியாவிட்டால், இடையிடையே அமர்ந்துகொள். நடுங்கும் குளிர் என்றால் போர்த்திக்கொண்டு விறகு வெட்டு. அட்டைப்பூச்சிகள் கடித்து ரத்தம் வடிந்தால், காட்டு இலைகளைப் பறித்து தேய்த்துவிட்டு, தொடர்ந்து வேலையைச் செய்.

’நம்மைப் பொறுத்தவரை மலேரியா ஒழிப்புக்கும், மருத்துவத்துக்கும் ஏராளமான தொகையைச் செலவழிப்பதைவிட இந்த நாத்தம் பிடித்த பிச்சைக்காரப் பயல்கள் செத்துத் தொலைந்து போவதே நல்லது. கொஞ்சம் ஆட்கள் குறைந்து போவது இந்த நாட்டுக்கு மிகவும் நல்லது. பொருளாதார அடிப்படையில்.’ இப்படித்தான் நினைத்தார்கள் பிரிட்டிஷ் அதிகாரிகள்.

பிரிட்டனுக்கு இந்தியா ஒரு காலனி நாடு. எதற்காக ஒரு நாடு காலனியாதிக்கத்துக்கு உட்படுத்தப்படுகிறது? அங்குள்ள வளங்களை உறிஞ்சுக்கொள்வதற்காக. அங்குள்ள மக்களைப் பயன்படுத்திக்கொள்வதற்காக. கைநிறைய லாபம் ஈட்டுவதற்காக. ’மனிதாபினத்தின் காரணமாக நாம் இங்கே வரவில்லை. இங்கிலாந்தில் இருக்கும் பங்குதாரர்களுக்கு லாபமீட்டித் தருவதற்காகவே இங்கே வந்திருக்கிறோம். அதுவும் கொழுத்த லாபம். அதற்கான விலையை இந்த நாடு கொடுக்கிறதா அல்லது வேறு யாராவது கொடுக்கிறார்களா என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. நமக்கு லாபம் வேண்டும். அதை ஈட்டியே ஆகவேண்டும்.’

1900 முதல் 1930 வரை வால்பாறை தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்த பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையைக் கேட்டறிந்து அழுத்தமான ஒரு நாவலாக உருமாற்றியிருக்கிறார் பி.எச். டானியல். ஆங்கிலத்தில் Red Tea. தமிழில் எரியும் பனிக்காடாக வெளிவந்துள்ளது. விடியல் பதிப்பம். மொழிபெயர்த்திருப்பவர், இரா. முருகவேள். மலையருவி போல் சரளமாகப் பாய்ந்து செல்லும் நடை. இப்படியும் மொழிபெயர்க்கமுடியுமா? (முருகவேள் அருமையாக மொழிபெயர்த்த மற்றுமோர் புத்தகத்தைத் தற்போது வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்).

தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றுவதற்காக இந்தியாவில் இருந்து இலங்கைக்குக் குடிபெயர்ந்த தமிழர்களின் கதை இன்னமும் சொல்லப்படவில்லை என்று ஓர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதி சமீபத்தில் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். எத்தனை ஆயிரம் பேர் இங்கிருந்து அங்கே சென்றிருப்பார்கள்? இடையில் எத்தனை பேர் விலங்குகளிடம் சிக்கி இறந்துபோயிருப்பார்கள்? தேயிலைத் தோட்டங்களில் அவர்கள் அனுபவித்த சித்திரவதைகள் என்னென்ன? அங்குள்ள தோட்டக் கல்லரைகளில் எத்தனை தமிழர்களின் சடலங்கள் புதைந்துபோயுள்ளன?

தேயிலை, காபி தோட்டங்களில் மட்டுமே நிலவிவரும் கொடுமை அல்ல இது. இந்தியா முழுவதும் அடிமைமுறை இந்த நிமிடம் வரை பரவிகிடக்கிறது. கிராமங்களில் மட்டுமல்ல நகரங்களிலும். அன்று ஐம்பதுக்கும் நூறுக்கும் விலைபோனவர்கள் இன்று ஒரு சில ஆயிரத்துக்கு தங்களை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளும்கூட இதற்கு விதிவிலக்கல்ல. வெள்ளைக்கார துரைகளுக்குப் பதிலாக உள்ளூர் செல்வந்தர்கள். செங்கல் சூளைகளில் இருந்தும், திருப்பூர் சாயப்பட்டறைகளில் இருந்தும் மீட்கப்படும் கொத்தடிமைகள் பற்றி அவ்வப்போது செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. மீட்கப்படாமல் பல கருப்பன்களும் வள்ளிகளும் இன்னமும் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

காலனியாதிக்கத்தின் நிஜ முகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது எரியும் பனிக்காடு. கண்களில் நீர் சேராமல் இப்புத்தகத்தைப் படித்து முடிப்பது சிரமமானது.

நன்றி: மருதன்